Published : 18 Feb 2023 09:45 AM
Last Updated : 18 Feb 2023 09:45 AM

இந்திய ஜனநாயகத்தை தகர்க்க முயல்கிறார் ஜார்ஜ் சோரஸ் - அமெரிக்க தொழிலதிபர் மீது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சனம்

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த செல்வந் தர் ஜார்ஜ் சோரஸ், அதானி - ஹிண்டன்பர்க் தொடர்பாக பிரதமர் மோடி குறித்தும் இந்தியா குறித்தும் தெரிவித்திருக்கும் கருத் துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் பங்கு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன் பர்க் ஆய்வு நிறுவனம், கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை வெளியானதையடுத்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியது. ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் அக்குழுமத்துக்கு இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் ஓப்பன் சொசைட்டி என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், “மோடியும் அதானியும் மிக நெருக்கமானவர்கள். அவர்கள் இருவரது வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது. தற்போது அதானி குழுமம் சீட்டுக் கட்டு சரிவதுபோல் சரிந்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் மோடி அமைதியாக இருக்கிறார். சர்வதேச முதலீட்டாளர்களின் கேள்விக்கு அவர் நாடாளுமன்றத்தில் பதில் அளித்தாக வேண்டும். அதானி குழுமத்தின் சரிவு மோடியின் ஆட்சியை வலுவிழக்கச் செய்யும். ஒருவகையில், அது இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜ் சோரஸின் பேச்சு இந்தியஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குறிப்பிட்டுள்ளார். அவர்மேலும் கூறியதாவது: சோரஸ் தன்னுடைய தனிப்பட்ட ஆதாயத்துக்காக இந்தியாவின் ஜனநாயகத்தை தகர்க்க விரும்புகிறார். குறிப்பாக பிரதமர் மோடியை குறிவைத்து 1 பில்லியன் டாலர் நிதி உதவி அறிவித்துள்ளார். இந்திய அரசு அவரது விருப்பத்துக்கு ஏற்ப வளைந்து செல்ல வேண்டும் என்று சோரஸ் நினைக்கிறார். இந்தியாவில் தனக்கு சாதகமான நபர்களை ஆட்சியில் அமர வைக்கும் நோக்கில் அவர் செயல்படுகிறார். இங்கிலாந்து வங்கியை சரிவுக்கு தள்ளியதால், அவர் பொருளாதார போர்க் குற்ற வாளியாக அறிவிக்கப்பட்டார். இப்போது அவர் இந்தியாவின் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கிறார். இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறி இருக்கும் இந்தத் தருணத்தில் அவர் இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். இது இந்தியா மீதான போர்.

இந்தியாவின் உள்விவகாரங் களில் தலையிட முயற்சி செய்யும் அந்நிய சக்திகளை இந்தியர்கள் ஒன்றிணைந்து தோற்கடிப்பார்கள். ஜார்ஜ் சோரஸ் போன்று இந்தியாவை சீர்குலைக்க முயற்சி செய்பவர்களை பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் எதிர்கொள்வோம். இவ்வாறு ஸ்மிருதி இரானி கண் டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x