Published : 16 Feb 2023 05:03 AM
Last Updated : 16 Feb 2023 05:03 AM

கோதாவரி எக்ஸ்பிரஸ் ஆந்திராவில் தடம் புரண்டது

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று தடம் புரண்டது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட் டினத்தில் இருந்து தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்துக்கு கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று காலை விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டது.

ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பீபீ நகர் அருகே அங்குஷாபூர் எனும் இடத்தில் அந்த ரயிலின் 6 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. பயங்கர சத்தத்துடன் ரயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழிறங்கின. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்தில் பயணிகள் எவருக்கும் காயமோ உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை.

தகவல் அறிந்ததும் தென்மத்திய ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பிறகு இரவு 7 மணி வரை போராடி ரயில் பெட்டிகளை மீண்டும் இணைத்து சரி செய்தனர். இதனிடையே பயணிகள் வேறு ரயில்களில் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து காரணமாக 7 எக்ஸ்பிரஸ் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன. மேலும் 12 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x