Last Updated : 09 Feb, 2023 03:17 PM

 

Published : 09 Feb 2023 03:17 PM
Last Updated : 09 Feb 2023 03:17 PM

மாற்றுத் திறனாளிகளுக்கு டிஜிட்டல் முறையில் பலன் கிடைக்கிறதா? - கனிமொழி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: "மாற்றுத் திறனாளிகளுக்கு டிஜிட்டல் முறை பலன் கிடைக்கிறதா?" என திமுக எம்.பி கனிமொழி மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ஏ.நாராயணசாமி விரிவான பதில் அளித்தார்.

இது குறித்து இன்று நாடாளுமன்ற மக்களவையில் திமுக மக்களவை குழு துணைத் தலைவரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி எழுப்பிய கேள்வியில், ''டிஜிட்டல் ஆளுகைக்கான முன்முயற்சிகள் நாட்டின் மாற்றுத் திறனாளி மக்களுக்கு, குறிப்பாக பார்வை மற்றும் மூளை வளர்ச்சி மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவில்லை என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? மாற்றுத் திறனாளிகளுக்கு இணக்கமான தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் ஏதேனும் கொள்கை முடிவு உள்ளதா?

மாற்றுத் திறனாளிகளுக்கு சாதகமாக இருக்கும் வகையில் சோதிக்கப்பட்ட அரசு செயலிகள் மற்றும் இணையதளங்களின் விவரங்கள் என்ன? மாற்றுத் திறனாளிகளுக்கான வணிக பயன்பாடுகளை உள்ளடக்கிய செயலி வடிவமைப்பை ஊக்குவிக்க அரசாங்கம் ஏதேனும் முன்முயற்சி அல்லது கொள்கையை மேற்கொண்டிருக்கிறதா? இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?'' எனக் கேட்டிருந்தார்.

இதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ஏ. நாராயணசாமி அளித்த பதிலில் கூறியதாவது: ''ஒன்றிய அரசு 19.04.2017 அன்று முதல் நடைமுறைக்கு வந்த மாற்றுத் திறனாளிகள் உரிமை (RPWD) சட்டத்தை (2016) இயற்றியுள்ளது. இந்தச் சட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இதில் பார்வை மற்றும் பிற குறைபாடுகள் உள்ளவர்கள் உட்பட, உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையில்லாத சூழலை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது.

இந்த சட்டத்தின் பிரிவு 42-இன்படி ஆடியோ, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் கிடைக்கும் அனைத்து உள்ளடக்கங்களையும் பார்வை மாற்றுத் திறனாளிகள் அணுகக்கூடிய வடிவத்தில் இருப்பதை உறுதி செய்ய உரிய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டத்தின்படி பொது கட்டடங்கள், பேருந்து போக்குவரத்து, இணைய தளங்கள் ஆகியவற்றை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான நிலையில் பராமரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதிகளின்படி அனைத்து அரசு இணையதளங்களும் இணையதளங்களுக்கான வழிகாட்டுதல்களுக்கு இணங்க இயங்க வேண்டும் என்பதை நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகள் துறை கவனித்துக் கொள்கிறது. மேலும், இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) தகவல், தொடர்பு தொழில்நுட்பத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் மாற்றுத் திறனாளிகளின் அணுகல் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக முறையே 24.12.2021 மற்றும் 04.05.2022 என இரு முறை அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது.

கடந்த 2017-18ஆம் ஆண்டில், உள்ளடக்க மேலாண்மை கட்டமைப்பின் கீழ், மத்திய அரசின் அமைச்சகங்கள் அல்லது துறைகளின் 95 இணையதளங்கள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MEITY) அமைக்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை (DEPWD) பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் 632 இணைய தளங்களையும் மாற்றுத் திறனாளிகள் அணுகக் கூடியதாக மாற்றியுள்ளது. மேலும், சுகம்யா பாரத் ஆப் என்ற க்ரவுட் சோர்சிங் மொபைல் செயலியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலி பொது மையக் கட்டமைப்பு, வசதிகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும் போது எதிர்கொள்ளும் அணுகல் தொடர்பான சிக்கல்களை தீர்க்க உதவுகிறது. எவரும், எங்கும், எந்த நேரத்திலும் பயன்படுத்துவதை இந்த செயலி உறுதிப்படுத்துகிறது" என்று இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x