Published : 08 May 2017 12:53 PM
Last Updated : 08 May 2017 12:53 PM
மேற்கு வங்கத்தில் பாஜகவின் பலத்தைத் தடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுடன் இணைய விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தி இந்துவிடம் (ஆங்கிலம்) பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் கவுதம் தேவ், ''பாஜகவின் இனவாத அரசியலுக்கு எதிராகப் போராட மம்தா பானர்ஜி உண்மையிலேயே ஆர்வம் காட்டினால், அவர் எங்களுடன் பேசலாம். இதுபற்றி விவாதிக்கத் தயாராக உள்ளோம். மேற்கு வங்கத்தில் பாஜக ஒரு இடத்தைக் கூட பிடிக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள ஆவலாக இருக்கிறோம்.
அதற்காக பாஜகவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயகச் சக்திகளை ஒன்றுதிரட்ட மார்க்சிஸ்ட் விரும்புகிறது. இதற்கு திரிணமூல் காங்கிரஸ் முக்கியத் தேவையாக இருக்கிறது. இந்திய நாட்டுக்கும், மேற்கு வங்கத்துக்கும் முக்கியமான ஆபத்தாக பாஜக இருக்கிறது.
அது மாதிரியான வலது சாரிக் கட்சி, மாநிலத்தில் முக்கியத்துவம் பெற்றுவிட்டால், ஜனநாயகமும் சிறுபான்மையினர் உரிமையும் நிச்சயம் இருக்காது. பாஜகவுக்கு எதிரான எங்களின் போராட்டத்துக்கு மம்தா பானர்ஜி தேவை'' என்று கூறினார்.
ஆனால் இந்த யோசனைக்கு மேற்கு வங்க மார்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மம்தா தரப்பில் கேட்டபோது, ''தேவ் கருத்துக்கு உடனடி எதிர்வினை எதுவும் இல்லை'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT