Published : 08 Feb 2023 04:15 PM
Last Updated : 08 Feb 2023 04:15 PM

“வேலையின்மை அதிகரிக்கும் வேளையில் அதானி போன்ற நிறுவனங்களில் அரசு முதலீடு” - கார்கே காட்டம்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குறுதி என்னானது என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மல்லிகார்ஜுன கார்கே இன்று (புதன்கிழமை) பேசியதாவது: ''ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். கடந்த 9 ஆண்டுகளில் 18 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். எங்கே அந்த 18 கோடி வேலைவாய்ப்புகள்? அதைக்கூட விட்டுவிடுங்கள். அரசு துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. இதை எப்போது நிரப்புவீர்கள்?

தனியார் நிறுவனங்களில் அரசு ரூ.82 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளது. நமது நாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் 10 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். ஆனால், மத்திய அரசோ பொதுத் துறை நிறுவனங்களில் முதலீடுகளை செய்யாமல், அதானி போன்ற குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. ஆனால், தனியார் நிறுவங்களில் 30 ஆயிரம் பேர்தான் பணியாற்றுகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களுக்காக நாட்டு மக்கள் அதிக விலை கொடுக்க வேண்டி உள்ளது.

ஆக்ஸ்ஃபாம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் வளங்களில் 62 சதவீதம் நாட்டு மக்களில் 5 சதவீதத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏழைகளிடம் நாட்டின் வளத்தில் 3-4 சதவீதம் மட்டுமே உள்ளது. குடியரசுத் தலைவரின் உரையில் இது குறிப்பிடப்படவே இல்லை'' என்று மல்லிகார்ஜு கார்கே தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x