''ராகுல் காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' - மக்களவை சபாநாயகருக்கு பாஜக எம்பி கடிதம்

ராகுல் காந்தி மக்களவையில் நேற்று பேசிய காட்சி
ராகுல் காந்தி மக்களவையில் நேற்று பேசிய காட்சி
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியையும், தொழிலதிபர் அதானியையும் தொடர்புபடுத்தி நாடாளுமன்றத்தில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைத் தெரிவித்த ராகுல் காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு பாஜக எம்.பி. நிஷிகந்த் துபே கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் அதானிக்கு சாதகமாக செயல்பட்டதன் காரணமாகவே, அதானியின் சொத்து மதிப்பு மிகப் பெரிய அளவுக்கு உயர்ந்ததாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மக்களவையில் நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், தனது குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி ஆதாரம் எதையும் சமர்ப்பிக்காததால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ''குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மீது ஆதாரமற்ற, அவதூறான, களங்கம் விளைவிக்கக்கூடிய குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார். தனது குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரத்தையும் அவர் சபைக்கு அளிக்கவில்லை. எனவே, அவர் சபையை தறவாக வழிநடத்தி இருக்கிறார். சபை விதிகளை மீறி இருக்கிறார். எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி நேற்று பேசினார். அவர் ஆற்றிய உரை: ''நான் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டபோது, மக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை கேட்டேன். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என பல தரப்பினரிடமும் பேசினேன். இதன்மூலம் பல்வேறு விஷயங்களை அறிய முடிந்தது. இளைஞர்களைப் பொறுத்தவரை, அவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினை வேலைவாய்ப்பின்மைதான். உரிய வேலை கிடைக்காததால் அவர்களில் பலர் வாகன ஓட்டுநர்களாக இருக்கிறார்கள்.

குடியரசுத் தலைவரின் உரையில் வேலைவாய்ப்பின்மை குறித்தோ, பணவீக்கம் குறித்தோ குறிப்பிடப்படவில்லை. தமிழ்நாடு முதல் இமாச்சலப் பிரதேசம் வரை எங்கு பார்த்தாலும் ஒரே ஒரு பெயர்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அது அதானி என்ற பெயர். அதானியால் எவ்வாறு எல்லா தொழில்களிலும் ஈடுபடவும் வெற்றிபெறவும் முடிகிறது என மக்கள் கேட்கிறார்கள். கடந்த 2014-ல் ரூ.66,000 கோடியாக இருந்த அவரின் சொத்து மதிப்பு 2022-ல் ரூ.11.58 லட்சம் கோடியானது எப்படி என்றும் மக்கள் கேட்கிறார்கள்.

காஷ்மீரின் ஆப்பிள் முதல் துறைமுகம், விமான நிலையம், சாலை மேம்பாடு என எல்லாவகையான தொழிலும் அவரது பெயர்தான் பேசப்படுகிறது. குஜராத் முதல்வராக இருந்தபோதுதான் நரேந்திர மோடிக்கு அதானியுடன் தொடர்பு ஏற்படுகிறது. மோடிக்கு அவர் பக்கபலமாக; நம்பிக்கைக்கு உரியவராக மாறுகிறார். குஜராத்தின் மறுமலர்ச்சிக்கு உதவுகிறார். ஆனால், உண்மையான ஆச்சரியம், நரேந்திர மோடி 2014-ல் பிரதமராக டெல்லிக்கு வந்த பிறகுதான் நிகழ்கிறது.''

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in