Published : 23 May 2017 09:14 AM
Last Updated : 23 May 2017 09:14 AM
வரும் ஜூன் 8-ம் தேதி நடைபெற இருந்த 10 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று ரத்து செய்தது.
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேற்குவங்கம், குஜராத், கோவா ஆகியவற்றில் 10 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 8-ம் தேதி நடைபெற இருந்தது. வரும் ஜூலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியுமா என்பதை நிரூபிப்பதற்கான சோதனை வரும் ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த காரணங்களால் ஜூன் 8-ம் தேதி நடைபெற இருந்த 10 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன் ஆகியோரின் மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலம் வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நிறைவு பெற உள்ளது. அவர்கள் அனைவரும் மீண்டும் களத்தில் உள்ள நிலையில் மாநிலங்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT