குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் ஏராளமானோர் கைது - அசாமில் பெண்கள் தொடர் போராட்டம்

குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் ஏராளமானோர் கைது - அசாமில் பெண்கள் தொடர் போராட்டம்
Updated on
1 min read

புதுடெல்லி: அசாமில் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் ஏராளமானோர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, மாநில அரசுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக ஆளும் அசாமில் குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கை தீவிரமாகி உள்ளது. இதன் மீது வந்த சுமார் 4,074 புகார்கள் மீது முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உத்தரவின் பேரில் பிப்ரவரி 1 முதல் கைது நடவடிக்கை தொடங்கியது.

இதில், சுமார் 8,000 பேர் குற்றவாளிகளாக பதிவு செய்யப்\பட்டுள்ளனர். பெரும்பாலும் முஸ்லிம்கள் சிக்கியுள்ள இந்த வழக்கில் மணம் முடித்து வைத்த மவுலானா, காஜிக்கள் மற்றும் பெற்றோர்கள், காப்பாளர்கள் என இதுவரை சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களான இவர்களில் சுமார் 2,000 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 14 வயதுக்கும் குறைவான பெண்களை மணம் முடித்தவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நடவடிக்கையில் புகார் இன்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தராததாலும் சாட்சியங்கள் திரட்ட முடியாமலும் காவல்நிலையங்கள் திணறி வருவதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் போக்சோ வழக்கில் நடவடிக்கை எடுப்பது அசாமில் சிக்கலுக்கு உள்ளாகிவிட்டது.

இதனிடையே, தென் சல்மாரா மன்கச்சர் மாவட்டத்தில் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த விதவைப் பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். 18-க்கும் குறைவான வயதுடைய இப்பெண்ணை மணமுடித்த இளைஞர் கரோனா பரவல் காலத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் தனது தந்தை கைது செய்யப்படுவார் என்ற அச்சத்தால் இப்பெண் தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது.

அசாமின் டுப்ரி மாவட்டத்தில் மிக அதிகமாக 374, ஹோஜாய் மாவட்டத்தில் 255, மோரிகாவ்ன் மாவட்டத்தில் 224 என வழக்குகள்பதிவாகி உள்ளன. இதனால் ஆண்கள் மீதான நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்களும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் காவல் நிலையங்கள் முன் கடந்த2 தினங்களாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். தடியடி நடத்தியும்கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் இவர்கள் கலைக்கப்பட்டு வருகின் றனர். இந்த விவகாரத்தில் அசாமின் அரசியல் கட்சிகள் ஏனோ இன்னும் தீவிர எதிர்ப்பு காட்டாமல் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in