Published : 06 Feb 2023 07:42 AM
Last Updated : 06 Feb 2023 07:42 AM

வீட்டுக் கடன், வட்டி சேமிப்பு ஆகாதா? - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் பதில்

ப.சிதம்பரம் | கோப்புப்படம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து மத்திய நிதித் துறை செயலாளர் டி.வி.சோமநாதன் 'தி இந்து' நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், புதிய மற்றும் பழைய வருமான வரி முறைகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் குறித்து விளக்கினார்.

அப்போது அவர் கூறும்போது, “பழைய வரி முறை சேமிப்பை ஊக்குவிக்கிறது என்ற கருத்து ஏற்புடையது அல்ல. இந்த முறையில் வரி விலக்கு வழங்கப்படும் இனங்களில் 50% மட்டுமே சேமிப்பு ஆகும். வரி விலக்கு வழங்கப்படும் வீட்டுக் கடன் மற்றும் அதன் மீதான வட்டி உள்ளிட்ட சில இனங்களை சேமிப்பாக கருத முடியாது” என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று கூறியதாவது: “வீட்டுக் கடனையும் அதன் மீதான வட்டியையும் சேமிப்பாக கருத முடியாது என மத்திய நிதித் துறை செயலாளர் சோமநாதன் கூறியுள்ளார். வீட்டுக் கடன் மற்றும் அதன் மீதான வட்டிக்கு செலுத்தப்படும் தவணை செலவின் ஒரு பகுதிதான். அதேநேரம் இந்த செலவானது பின்னாளில் சொத்தாக மாறிவிடுகிறது. எனவே இதுவும் சேமிப்புதான். ஒருவேளை சுற்றுலா செல்வதற்கு அல்லது குதிரை பந்தயத்தில் ஈடுபடுவதற்காக செலவிடுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இது இறுதியில் சொத்தாக மாறாது. எனவே, வீட்டுக் கடன் சேமிப்பு அல்ல என்ற கருத்தை நிதித் துறை செயலாளர் மறு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x