Last Updated : 04 Feb, 2023 08:36 AM

 

Published : 04 Feb 2023 08:36 AM
Last Updated : 04 Feb 2023 08:36 AM

சட்டத்தை மீறி சிறுமிகளை திருமணம் செய்வது அதிகரிப்பு - அசாம் மாநிலத்தில் இதுவரை 1,460 பேர் கைது

புதுடெல்லி: அசாமில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை திருமணம் செய்துகொண்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மாலை வரை 1,460 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்கள் கணிசமாக வாழும் அசாமில் 18 வயதுக்கும் குறைவான சிறுமிகளை மணமுடிப்பது தொடர்கிறது. அசாமில் முஸ்லிம் அல்லாத பழங்குடி மக்களிலும் சிலர் இவ்வாறு திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “பெண்கள் மிகவும் இளம் வயதில் குழந்தை பெறுவது ஆரோக்கியமானது அல்ல. நமது மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோர் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை மணமுடித்துள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையங்களில் இதுவரை 4,004 புகார்கள் வந்துள்ளன. சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையடுத்து அசாமில் கடந்த பிப்ரவரி 1 முதல் தொடங்கிய நடவடிக்கையில் நேற்று மாலை வரை 1,460 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இவர்களில் திருமணத்தை நடத்தி வைத்த ஹாஜிக்கள், மவுலானாக்கள், பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்களும் அடங்குவர். இந்த தகவலை அசாம் மாநில காவல்துறை இயக்குநர் ஜி.பி.சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவர்கள் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டப் பிரிவு 376, போக்சோ சட்டத்தின் பிரிவுகள் 4, 5 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கைது செய்யப்பட்டவர்களில் சுமார் ஆயிரம் பேர் முஸ்லிம்கள். இவர்களில் பெரும்பாலானோர் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள். பொதுவாக அசாம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள சட்டப்படி பெண்களின் திருமண வயது 18 ஆகும். இதற்கு குறைந்த வயதுடைய பெண்களை மணமுடிப்பவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் 18 வயதுக்கு குறைவான பெண்கள் பருவம் அடைந்தபின் அவர்களை மணமுடிக்க முஸ்லிம்களின் ஷரீயத் சட்டம் அனுமதிக்கிறது. இதை தீர்ப்பாகவும் அதன் மீதான வழக்கில் பஞ்சாப் உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.

முஸ்லிம்களிடம் ஏற்பட்ட நவீன மாற்றத்தால் பெரும்பாலானோர் 18 வயதுக்கு குறைவான பெண்களை மணமுடிப்பதில்லை. இருப்பினும் மதத்தின் பெயரால் தொடரும் பழங்கால நடைமுறை சிலவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக ஆளும் மாநில அரசுகள் முயற்சிக்கின்றன. இந்துத்துவா கொள்கையும் இதன் பின்னணியில் இருப்பதாக புகார்கள் உள்ளன.

நாட்டின் முதல் மாநிலமாக அசாமில் பொது சிவில் சட்டம் கொண்டுவர முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா முடிவு செய்தார். இதை மத்தியபிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களும் தொடர்கின்றன. அசாமில் பொது சிவில் சட்டம் தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்கான சட்ட வரைவை உருவாக்க ஒரு நிபுணர் குழுவை அரசு அமைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x