பிஎப் பங்களிப்பை 10 சதவீதமாக குறைக்க மறுப்பு

பிஎப் பங்களிப்பை 10 சதவீதமாக குறைக்க மறுப்பு
Updated on
1 min read

வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (பிஎப்) செலுத்தப்படும் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பை 12-ல் இருந்து 10 சதவீதமாகக் குறைக்க பிஎப் வாரியம் மறுத்துவிட்டது.

ஊழியர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனம் சார்பில், அடிப்படை சம்பளத்தில் தலா 12 சதவீதம் பிஎப் நிதி மற்றும் ஓய்வூதிய நிதியில் செலுத்தப்படுகிறது. இதை 10 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத் துறைக்கு பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில், பிஎப் நிதி தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட மத்திய அறங் காவலர்கள் வாரிய (சிபிடி) கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நேற்று நடந்தது. இதில் பங்களிப்பு தொகையைக் குறைப்பது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பிஎப் பங்களிப்பு தொகையை 10 சதவீதமாகக் குறைக்க வாரியம் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா இக்கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிஎப் பங்களிப்பு நிதியை 12 சதவீதமாக தொடர வேண்டும் என்று ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை வைத்தனர். இதுபோல நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பிலும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அந்தக் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும். மேலும் பிஎப் நிதியை பங்குச்சந்தையில் (இடிஎப்) முதலீடு செய்வதற்கான உச்சவரம்பை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்க இக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in