

கடந்த 2000 ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிஹார் மாநிலம் முசாபர்பூரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நோக்கிச் சென்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. இதில் 9 பேர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக அலிகர் ,முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் ஆய்வு மாணவர் குலாம் அகமது வானி, மொபின் ஆகிய இருவரை டெல்லி போலீஸார் கடந்த 2001-ல் கைது செய்தனர். குற்றச்செயலில் ஈடுபட்டதற்கு ஆதாரமான பொருட்கள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஸ்ரீநகரைச் சேர்ந்தவரான வானி, லக்னோ சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி இருவரையும் பாரபங்கி கூடுதல் அமர்வு நீதிபதி வழக்கிலிருந்து விடுவித்தார்.
இந்நிலையில், “வழக்கை விசாரிப்பதில் அதிகாரிகளின் அலட்சியத்துக்கு குலாம் அகமது வானி பலிகடா ஆகியுள்ளார். இதனால் அவர் சிறையில் கழித்த காலத்துக்கு அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப சராசரி வருமானம் கணக்கிட்டு உ.பி. அரசு வழங்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.