Last Updated : 01 Feb, 2023 04:32 AM

 

Published : 01 Feb 2023 04:32 AM
Last Updated : 01 Feb 2023 04:32 AM

அலிகர் முஸ்லிம் பல்கலை.யில் ராமர் கோயில் கட்ட வேண்டும் - முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் அலிகர் நகரில், நாட்டின் பழமையான அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இது சர் சையது அகமது கான் எனும் அறிஞரால் நிறுவப்பட்டது. எனினும் இங்கு இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் கல்வி பயின்று வருகின்றனர்.

இதன் வளர்ச்சியை பார்த்து உ.பி.யின் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. மத்திய பல்கலைக்கழகமான இதில் பல சிறிய கோயில்கள் அமைந்துள்ளன.

எனவே அலிகர் பல்கலைக்கழக வளாகத்திலும் ஒரு கோயில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுந்து வருகிறது. இம்முறை இந்தக் கோரிக்கையை ஜாட் இளைஞர்கள் மஹா சபா எனும் சமூக அமைப்பினர் எழுப்பியுள்ளனர். முன்னாள் மாணவர்களான இதன் நிர்வாகிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அலிகர் பல்கலை துணை வேந்தர் தாரிக் மன்சூருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதில் வளாகத்தில் ஸ்ரீராமருக்கு கோயில்கட்டி, பூஜைக்கு அனுமதிக்கவில்லை எனில் போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அலிகர் மாவட்ட ஜாட் இளைஞர்கள் மஹா சபா தலைவர் ஆதேஷ் சவுத்ரி கூறியதாவது:

அலிகர் பல்கலைக்கழகத்தில் சுமார் 4,000 இந்து மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களுக்கு ஒரு கோயில்கூட வளாகத்தில் இல்லை. எனவே பல்கலை வளாகத்தில் ஸ்ரீராமர் கோயிலை கட்டப்பட வேண்டும். இதற்கு நிர்வாகத்திடம் நிதியில்லை எனில் நாங்கள் ரூ.21 லட்சம் திரட்டித் தரத் தயாராக உள்ளோம்.

முஸ்லிம் மாணவர்களுக்காக ஒவ்வொரு விடுதியிலும் மசூதி உள்ளது. இதுதவிர விடுதிகளுக்கு வெளியேயும் வளாகத்தின் பல இடங்களில் மசூதிகள் உள்ளன. இதன் எண்ணிக்கையும் கூடி வருகிறது. இதற்கான நிதி எங்கிருந்து வருகிறது என நிர்வாகம் விளக்க வேண்டும். இவற்றின் பராமரிப்புக்கு பயன்படுத்துவது மத்திய அரசின் நிதியா அல்லது வெளிநாட்டுப் பணமா என தெரிவிப்பது அவசியம்.

சமீபத்தில் குடியரசு தினத்தில் மதகோஷம் எழுப்பப்பட்டது, இதற்கு மதநல் லிணக்க பல்கலைக்கழகம் அனு மதிக்கிறது எனில் அதை, இந்து மாணவர்களுக்கும் அளிக்க வேண்டும். இதற்காக, வளாகத்தில் ஸ்ரீராமர் கோயிலை கட்டாவிட்டால் நாங்கள் நடத்தவுள்ள தீவிரப் போராட்டத்திற்கு துணைவேந்தர் காரணமாகி விடுவார். இவ்வாறு ஆதேஷ் சவுத்ரி கூறினார்.

கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்றிய பிறகு அங்கு கூடியிருந்த என்சிசி மாணவர்கள் இடையே, ‘அல்லாஹு அக்பர்’, நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்’ என முதன் முறையாக கோஷங்கள் எழுந்தன. இதன் வீடியோ பதிவுகள் வைர லாகியதை தொடர்ந்து பாஜக, இந்து மகாசபா உள்ளிட்ட அமைப்புகள் புகார்கள் தெரிவித்தன.

இதனால் கோஷமிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அலிகர்காவல் துறையும் இக்கல்வி நிறுவனத்திடம் வலியுறுத்தியுள்ளது.

அலிகர் பல்கலைக்கழகத்தில் சுமார் 4,000 இந்து மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களுக்கு ஒரு கோயில்கூட வளாகத்தில் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x