Published : 31 Jan 2023 12:05 PM
Last Updated : 31 Jan 2023 12:05 PM

தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் அரசு எனும் பெயரை மத்திய அரசு பெற்றிருக்கிறது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் திரவுபதி முர்மு

புதுடெல்லி: தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் அரசு எனும் பெயரை மத்திய அரசு பெற்றிருக்கிறது என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இதை முன்னிட்டு, மரபுப்படி நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அதில் அவர் தெரிவித்ததாவது: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தற்போது அமிர்த காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான காலகட்டமாக அடுத்த 25 ஆண்டுகள் திகழ உள்ளன. வரும் 2047க்குள் வளர்ந்த நாடாக நாட்டை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நமது கடந்த கால பெருமிதத்தை நவீனத்துடன் இணைப்பதாக நமது செயல்கள் இருக்க வேண்டும்.

நாம் உருவாக்க உள்ள இந்தியா என்பது தற்சார்பு கொண்டதாகவும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய இந்தியாவில் ஏழ்மை இருக்காது. நடுத்தர மக்களும் அனைத்தையும் பெற்றிருப்பார்கள். இளைஞர் சக்தி, பெண்கள் சக்தி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மை துடிப்பானது. நமது நாட்டின் ஒற்றுமை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாதது.

வேலையே கடவுள் என்றார் பகவான் பசவேஸ்வரர். அதாவது, நாம் செய்யும் வேலையில் கடவுளும் இருக்கிறார். அவர் காட்டிய வழியில் கடமையை உணர்ந்து எனது அரசு முழுமூச்சாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக நிலையான அரசை தேர்ந்தெடுத்ததற்காக நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது அரசு, நாட்டின் நலனையே பிரதானமாகக் கருதி செயல்பட்டு வருகிறது. அதற்கேற்பவே, கொள்கைகளையும் வியூகங்களையும் முற்றிலுமாக மாற்றி உள்ளது.

துல்லிய தாக்குதல் முதல், பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் வரை, எல்லை கட்டுப்பாட்டுக் கோடு முதல் அமலில் உள்ள உண்மையான எல்லை வரை, சட்டப்பிரிவு 370 நீக்கம் முதல் முத்தலாக் நீக்கம் வரை எனது அரசு தீர்க்கமான முடிவுகளை எடுக்கக்கூடியது என்றஅங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. எனது அரசு நிலையானது, அச்சமற்றது, தீர்க்கமானது, மிகப்பெரிய கனவுகளை நனவாக்க உழைக்கக்கூடியது. இன்று இந்தியாவின் நேர்மை மதிப்புக்குரியதாக உள்ளது. ஏழைகளை மேம்படுத்துவதையே தனது இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல்வேறு அரசு எளிதாக்கி இருக்கிறது. கடந்த காலங்களில் வரி கட்டியவர்கள், நிதியை திரும்பப் பெறுவது (tax refund) மிக நீண்ட செயலாக இருந்தது. தற்போது ஒருசில நாட்களில் நிதியை திரும்பப் பெற முடிகிறது. வெளிப்படைத்தன்மையோடு, வரி செலுத்துபவர்களின் கண்ணியமும் இதன்மூலம் காக்கப்படுகிறது.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11 கோடி குடும்பங்கள் குடிநீர் இணைப்பை பெற்றுள்ளன. ஏழைகளின் சிரமங்களைப் போக்கும் நோக்கில் வீடு கட்டும் திட்டம், குடிநீர் வழங்கும் திட்டம், மின்இணைப்பு வழங்கும் திட்டம், கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இத்தகைய குடும்பங்களில் குழந்தைகள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் வளருகிறார்கள். கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 3.5 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த 2014 முதல் நாள்தோறும் 11 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. நாள்தோறும் 2.5 லட்சம் இணைய இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் 55 ஆயிரத்துக்கும் அதிகமான கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. முத்ரா திட்டத்தின் கீழ் நாள்தோறும் 700 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் 300 புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் 2 கல்லூரிகள் உருவாகி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x