Published : 31 Jan 2023 04:45 AM
Last Updated : 31 Jan 2023 04:45 AM

பட்ஜெட் கூட்டத்தொடர் - அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் பங்கேற்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். படம்: பிடிஐ

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று விவாதித்தனர்.

ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில் அந்த ஆண்டின் முதல்பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். அந்த வகையில் இன்று (ஜனவரி 31) இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்துக்குப் பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்த அறிக்கையில் 2022-2023-ம் ஆண்டின் திட்டங்கள் குறித்து இடம்பெறும்.

இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் இது. நடப்பாண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், அனைத்துக்கட்சி கூட்டம் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய அமைச்சர் கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால், வி.முரளீதரன், திமுக எம்.பி. டி.ஆர். பாலு, திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் சுதீப் பந்தோபாத்யாய, சுகேந்து சேகர் ராய், தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் கே.கேசவராவ், நாம நாகேஷ்வர ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விவாதித்தனர்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் விஜய சாய் ரெட்டி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா, ஐக்கிய ஜனதா தளத்தின் ராம்நாத் தாக்குர், சிவசேனா கட்சியின் (உத்தவ் தாக்கரே பிரிவு) பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இறுதி நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் காங்கிரஸ் சார்பில் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 13-ம் தேதி நிறைவடைகிறது. கூட்டத் தொடரின் 2-வது பகுதி மார்ச் 13-ம் தேதி தொடங்கும். அப்போது பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x