Published : 30 Jan 2023 06:04 AM
Last Updated : 30 Jan 2023 06:04 AM

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான டெட் 2-ம் தாள் தேர்வு: பிப். 3 முதல் 14 வரை நடைபெறுகிறது

கோப்புப்படம்

சென்னை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்துவித பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட் தேர்வு 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது.

அதன்படி 2022-ம் ஆண்டுக்கான டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 16 முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 1 லட்சத்து 53,023 பேர் எழுதினர். அதன் முடிவுகள் டிசம்பர் 7-ம் தேதி வெளியிடப்பட்டன. அதில் 21,543 பேர் (14%) மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து டெட் 2-ம் தாள் தேர்வு எழுத 4 லட்சத்து 1,886 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான தேர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை நடத்தப்படும் என்று டிஆர்பி ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் தேர்வு தேதியில் தற்போது மாற்றம் செய்து புதிய அட்டவணையை டிஆர்பி வெளியிட்டுள்ளது. அதன்படி டெட் 2-ம் தாள் தேர்வு பிப்ரவரி 3 முதல் 14-ம் தேதி வரை கணினி வழியில் நடைபெற உள்ளது. இதுதவிர தேர்வர்களுக்கான முதல்கட்ட ஹால்டிக்கெட்களும் தற்போது வெளியாகியுள்ளன.

முதல்கட்ட ஹால்டிக்கெட்டில் தேர்வு மையம் அமைந்துள்ள மாவட்டம் மட்டுமே இடம் பெற்றிருக்கும். தொடர்ந்து தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன் வெளியாகும் 2-வது கட்ட ஹால்டிக்கெட்டில் தேர்வு மையத்தின் முழு விவரமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதற்கிடையே டெட் 2-ம் தாள் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் முந்தைய தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதால் 10 பேர் உட்பட 30 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x