Published : 28 Jan 2023 06:54 PM
Last Updated : 28 Jan 2023 06:54 PM

பெயர் மாற்றம்: குடியரசுத் தலைவர் மாளிகையின் ‘முகலாய தோட்டம்’ இனி ‘அம்ரித் உத்யன்’

அம்ரித் உத்யன் என்று பெயர் மாற்றப்பட்ட முகலாய தோட்டம்

புதுடெல்லி: குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் உள்ள 'முகல்' கார்டன் எனப்படும் முகலாயத் தோட்டத்திற்கு 'அம்ரித் உத்யன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் அமிர்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியரசுத் தலைவரின் இணை செய்தித் தொடர்பாளர் நவிகா குப்தா கூறியது: “நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் அமிர்தகால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொகலாயர் தோட்டம் என அறியப்பட்டும் தோட்டத்திற்கு "அமிரித் உத்யன்" என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெயர்சூட்டி உள்ளார்.

இந்தத் தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்திருக்கும். மேலும், இந்த முறை ஜன.31 முதல் மார்ச் 26 வரை இரண்டு மாதங்களுக்கு திறந்திருக்கும். இவை தவிர, மாற்றுத் திறனாளிகள், விவசாயிகள், பெண்களுக்காக சில நாட்கள் பிரத்யோகமாக ஒதுக்கப்படும்" என்றார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகையின் இணைய தளத்திலும் அம்ரித் உத்யன் பற்றி புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில், ‘சுமார் 15 ஏக்கர் விரிந்து பரவியிருக்கும் அம்ரித் உத்யன், அடிக்கடி குடியரசுத் தலைவர் மாளிகையின் ஆன்மாவாக சித்தரிக்கப்படுகின்றது. அம்ரித் உத்யன் தோட்டம், ஜம்மு காஷ்மீரில் உள்ள முகலாயர் தோட்டம், தாஜ்மஹாலை சுற்றியுள்ள தோட்டங்கள், பெர்ஷியாவின் மினியேச்சர் ஓவியங்களின் தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

கடந்த 1927-ம் ஆண்டு தொடக்கத்தில் சர் எட்வின் லுட்யின்ஸ் அம்ரித் உத்யன் தோட்டத்தின் வடிவத்தை இறுதி செய்தார். ஆனாலும், 1928 - 29 காலக்கட்டங்களில் தான் தோட்டம் உருவாக்கப்பட்டது. லுட்யின் தோட்டக்கலை நிபுணர் வில்லியம் முஸ்டோனுடன் இணைந்து இதனை உருவாக்கியது இதன் மற்றொரு சிறப்பு.

இந்திய மற்றும் மேற்கத்திய கட்டிடகலை பாணிகள் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் ராஷ்டிரபதி பவன் கட்டிடம் போலவே, லுட்யின்ஸ் இந்தத் தோட்டத்தையும் முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் பாணிகளை இணைத்து உருவாக்கினார். முகலாயர் பாணி கால்வாய்கள், மேல்தளங்கள் பூக்கள் அடந்த புதர்கள் போன்றவை, ஆங்கிலேயர் பாணி மலர் படுக்கைகள், புல்வெளிகள், தனியார் ஹெட்ஜ்களுடன் அழகாக ஒன்று கலந்து உருவாக்கப்பட்டிருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அமிர்த காலத்தில் அடிமை மனப்பான்மையில் இருந்து வெளியே வருவது மிகவும் அவசியமான ஒன்று. அதன்படி, அடிமை மனப்பான்மையில் இருந்து வெளியேறும் மோடி அரசின் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு இது. ராஷ்டிரபதி பவனில் உள்ள முகல் தோட்டம் இனி அம்ரித் உத்யன் என்று அழைக்கப்படும்" என்று இந்தியில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x