Published : 28 Jan 2023 04:50 PM
Last Updated : 28 Jan 2023 04:50 PM

மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா பேரவைத் தேர்தல்: ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன?

புதுடெல்லி: மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநில சட்டப்பேரவைகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான அட்டவணை கடந்த 18-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மேகாலயா, நாகாலாந்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி 27-ம் தேதியும், திரிபுராவில் ஒரே கட்டமாக பிப்ரவரி 16-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில், தேர்தல் தொடர்பாக , மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 126-ன்படி அனைத்து ஊடகங்களும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் பற்றி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளின் விவரம்:

> வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக, தொலைக்காட்சி அல்லது பிற ஊடகங்கள் மூலம் தேர்தல் விஷயங்களைக் காட்டுவது தடை செய்யப்படுகிறது. வாக்கெடுப்பு முடிவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடையும் 48 மணிநேரத்தில் பொதுக் கூட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. எனவே, அதுபற்றிய செய்திகளை வெளியிடக்கூடாது.

> தொலைக்காட்சிகள் மூலம் எந்தவொரு தேர்தல் விஷயத்தையும் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது. இந்த விதிகளை மீறும் எந்தவொரு நபரும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவார்.

> தேர்தல்களின்போது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் மேற்கண்ட பிரிவு 126-இன் விதிகளை டிவி சேனல்கள் தங்கள் குழு விவாதங்கள் மற்றும் பிற செய்தி மற்றும் நடப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் சில சமயங்களில் மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு காலகட்டத்தில் , தொலைக்காட்சி மூலம் தேர்தல் விஷயங்களைக் காட்டுவதை, மேற்கூறிய பிரிவு 126 தடைசெய்கிறது என்று தேர்தல் ஆணையம் கடந்த காலத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. அந்தப் பிரிவில் "தேர்தல் விஷயம்" என்பது தேர்தல் முடிவை பாதிக்கும் அல்லது பாதிக்கும் நோக்கம் கொண்ட அனைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளது.

> பிரிவு 126 இன் மேற்கூறிய விதிகளை மீறினால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். கருத்துக் கணிப்புகளை நடத்துவதையும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கட்டத்தில் அதன் முடிவுகளைப் பரப்புவதையும் 126-வது பிரிவு - ஏ தடை செய்கிறது.

> பிரிவு 126-ன் கீழ் வராத காலத்தில், சம்பந்தப்பட்ட டிவி/ரேடியோ/கேபிள்/எஃப்எம் சேனல்கள்/இன்டர்நெட் இணையதளங்கள் / சமூக ஊடக தளங்கள் எந்தவொரு ஒளிபரப்பு /தொலைக்காட்சி தொடர்பான நிகழ்வுகளை நடத்துவதற்கு தேவையான அனுமதிக்கு மாநில/மாவட்டம்/உள்ளூர் அதிகாரிகளை அணுகலாம்.

> அனைத்து அச்சு ஊடகங்களின் கவனத்திற்கு, பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா 30.07.2010 தேதியிட்டு வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் தேர்தலின்போது கடைபிடிக்கப் பின்பற்ற வேண்டிய ‘பத்திரிக்கை நடத்தை விதிமுறைகள்- 2020’ ஆகியவற்றைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x