Published : 25 Jan 2023 07:55 PM
Last Updated : 25 Jan 2023 07:55 PM

மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் திரையிட முயற்சி: ஜாமியா மிலியா பல்கலை. மாணவர்கள் 4 பேர் கைது

பல்கலைகழகத்தில் கூடியிருந்த மாணவர்கள்

புதுடெல்லி: ‘இந்தியா - மோடிக்கான கேள்விகள்’ என்ற பிபிசி ஆவணப்படம் திரையிடப்படும் என்று அறிவித்த ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு மாணவர்கள் சிலர் ‘இந்தியா - மோடிக்கான கேள்விகள்’ என்ற பிபிசி ஆவணப்படம் மீதான தடையை மீறி, பல்கலைக்கழகத்தில் திரையிடப்படும் என அறிவித்தனர். இந்த நிலையில், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 4 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழ துணை வேந்தர் நஜ்மா அக்தர் கூறும்போது, “வளாகத்தில் எந்த தொந்தரவும் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. பல்கலைக்கழகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண விரும்புகிறோம். இங்குள்ள இந்திய மாணவர் கூட்டமைப்பின் (SFI) சிறிய குழு ஒன்று போராட்டத்தை நடத்துகின்றனர்.

மாணவர்களின் இந்த மாதிரியான நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கவில்லை. வளாகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதே போராட்டக்காரர்களின் நோக்கம். நாங்கள் இதனை அனுமதிக்க மாட்டோம். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து அறிக்கை கேட்டுள்ளோம். தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அந்த மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்தக் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி கடந்த 17-ம் தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. “இந்தியா - மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பிபிசியின் ஆவணப்படத்தை யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட மத்திய அரசு கடந்த 18-ம் தேதி தடை விதித்தது. என்றாலும், பிபிசி ஆவண படம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. அதோடு பிபிசி ஆவணப்படத்துக்கான இணைப்பும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது. இத்தகைய சமூக வலைதளப் பதிவுகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது.

இந்த நிலையில் இந்த ஆவணப்படம் பல்கலைகழக வளாகத்தில் திரையிடப்படும் என ஜேஎன்யூ, ஜாமியா மிலியா இஸ்லாமியா போன்ற பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x