மக்களவையில் பேச அனுமதிக்கப்படாததால் மக்கள் மன்றத்தில் பேசுகிறேன்: மோடி

மக்களவையில் பேச அனுமதிக்கப்படாததால் மக்கள் மன்றத்தில் பேசுகிறேன்: மோடி
Updated on
1 min read

மக்களவையில் தான் பேச முடியாத அளவுக்கு அமளி நீடிப்பதால் மக்கள் மன்றத்தில் பேசுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் தீசா கிராமத்தில் நடந்த விவசாயிகள் பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் விட்டுவைக்கப்பட மாட்டார்கள். கறுப்பை வெள்ளையாக்க உதவிய வங்கி அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டுள்ளனர். மோடி எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமரா வைத்திருக்கிறார் என்பதை அவர்கள் அறியவில்லை.

பண மதிப்புநீக்க நடவடிக்கை ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட யுத்தி. சமூக நலத்திட்டங்களை முடக்கிய ஊழல்வாதிகளின் அதிகாரத்தை பறிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை.

பண மதிப்புநீக்க நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் பேசத் தயாராக இருக்கிறோம். அதற்கு அவை தடையின்றி நடைபெற வேண்டும். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தேர்ந்த அனுபவம் கொண்ட குடியரசுத் தலைவரும்கூட நாடாளுமன்ற முடக்கம் குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். மக்களவையில் நான் பேச முடியாத அளவுக்கு அமளி நீடிப்பதால் மக்கள் மன்றத்தில் பேசுகிறேன்.

பண மதிப்பு நீக்கத்தால் தீவிரவாதிகள் பலமிழந்துள்ளனர். கள்ளநோட்டுகள் முடக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் 50 நாட்களில் சீராகிவிடும். மக்கள் மொபைல் வழி பண பரிவர்த்தனைகளை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in