74-வது குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் படாக் அல்-சிசி சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

எகிப்து அதிபர் படாக் அல்-சிசி
எகிப்து அதிபர் படாக் அல்-சிசி
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை. இந்தியாவின் 74-வது குடியரசு தின விழாவில் சிறப்பு தலைமை விருந்தினராக பங்கேற்க எகிப்து அதிபர் படாக் அல்-சிசிக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட அல்-சிசி குடியரசு தின விழாவில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார். எகிப்து அரபுக் குடியரசின் தலைவர் ஒருவர் இந்திய குடியரசுதின விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

எகிப்து அதிபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருப்பதையடுத்து அந்நாட்டு ராணுவத்தை சேர்ந்த சில குழுக்களும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளன.

எகிப்து அதிபரின் இந்திய பயணத்தின்போது அவருடன் இருதரப்பு உறவு குறித்து பிரதமர் மோடி விரிவான முறையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளார். அத்துடன், அந்த நாட்டைச் சேர்ந்த வர்த்தக குழுவினரையும் சந்தித்துப் பேச உள்ளார்.

ஐந்து அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழு இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளது. இவ்வாறு வெளியுறவுத் துறை அமைச்சகம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in