Published : 22 Jan 2023 05:43 AM
Last Updated : 22 Jan 2023 05:43 AM

திருப்பதி ஏழுமலையான் கோயிலை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்தது யார்? - தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் விசாரணை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்தது குறித்து தேவஸ்தான பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில்தீவிரவாதிகளின் தாக்குதலுக்குகுறியாகாமல் இருக்க 24 மணிநேரமும் ஆக்டோபஸ் படைகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளன. திருமலையில் சுமார் ஆயிரக்கணக்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆயுதப் படையினர், ஊர்க்காவல் படையினர், ஸ்ரீவாரி சேவகர்கள், விஜிலென்ஸ் அதிகாரிகள், ஊழியர்கள் என அலிபிரி முதற்கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் முழுவதும் 365 நாட்களும் தீவிர பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருமலையை யாரோ ட்ரோனில் கேமரா பொருத்தி வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். இது தற்போது பெரும் விவாதத்திற்கு காரணமாகி உள்ளது. இவ்வளவு பாதுகாப்பையும் மீறி யார், எப்படி ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்தது என கேள்வி எழுந்துள்ளது. இப்படி யார் வேண்டுமானாலும் கோயிலை சுற்றிலும் ட்ரோன் கேமராவால் வீடியோ எடுத்தால் பக்தர்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

சமூக வலைதளங்களில் உலா வரும் இந்த வீடியோவை பார்த்த தேவஸ்தான அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து நேற்று திருமலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி கூறும்போது, ‘‘ஹைதரபாத்தை சேர்ந்த ஒரு அமைப்பினர் ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருப்பது விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது கடும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் பக்தர்கள் யாரும் அஞ்ச வேண்டாம்’’ என கூறினார். ஆனால், தேவஸ்தானம் பக்தர்களின் பாதுகாப்பில் இவ்வளவு அலட்சியமா என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x