உ.பி.யில் பூனை காணாமல் போனதால் கோபம் 35 புறாக்களை விஷம் வைத்து கொன்ற பெண்

உ.பி.யில் பூனை காணாமல் போனதால் கோபம் 35 புறாக்களை விஷம் வைத்து கொன்ற பெண்
Updated on
1 min read

பரேலி: உ.பி.யின் ஷாஜகான்பூர் நகரின் ஜலால்நகர் பகுதியை சேர்ந்தவர் வாரிஸ் அலி (32). புறாக்களுக்கு பயிற்சி அளிப்பதை தொழிலாகக் கொண்டுள்ளார். இவர் தனது வீட்டு மாடியில் சுமார் 80 புறாக்கள் வைத்துள்ளார்.

இந்நிலையில் 35 புறாக்களை அண்டை வீட்டுப் பெண் விஷம் வைத்து கொன்று விட்டதாக அப்பகுதி காவல் நிலையத்தில் வாரிஸ் அலி புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வாரிஸ் அலி கூறும்போது, “கடந்த மாதம் பக்கத்து வீட்டுப் பெண் வளர்த்து வந்த பூனை காணாமல் போனது. இதற்கு அவர் என் மீது பழி சுமத்தி வருகிறார். எனது புறாக்களை கொல்லப் போவதாக மிரட்டி வந்தார். அதுபோலவே எனது வீட்டு மாடியில் விஷம் கலந்த தானியத்தை தூவி 35 புறாக்களை கொன்றுவிட்டார்” என்றார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “புகாரின் பேரில் அப்பெண்ணுக்கு எதிராக இந்திய தண்டனை சட்டத்தின் 428-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை அழைத்து விசாரித்தோம். இறந்த பறவையின் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ளோம். முடிவுகள் வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in