Published : 21 Jan 2023 02:29 PM
Last Updated : 21 Jan 2023 02:29 PM

ஜம்மு | நார்வால் பகுதியில் நடந்த இரட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 7 பேர் காயம் 

ஸ்ரீநகர்: ஜம்மு நகரின் நார்வால் பகுதியில் இன்று(சனிக்கிழமை) நடந்த இரண்டு கார் குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 7 பேர் காயம் அடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு ரயில் நிலையம் அருகே இன்று இரண்டு கார்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம் வணிகப் பகுதி. இங்கு வாகனங்களுக்கான டயர் மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கான கடைகள் அதிகமாக உள்ளன. வாகன உரிமையாளர்கள் தங்களின் வாகனங்களை பழுது நீக்க இங்கே வருவதால் நாள் முழுவதும் இந்த இடம் பரபரப்பாகவே இருக்கும்.

குண்டுவெடிப்பு குறித்து கூடுதல் காவல்துறை இயக்குனர் முகேஷ் சிங் கூறுகையில், "ஜம்முவின் நார்வால் பகுதியில் இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இந்த இரட்டை குண்டுவெடிப்பில், 7 பேர் காயமடைந்துள்ளனர்" என்றார். மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ட்ரான்ஸ்போர்ட் நகரின் யார்டு எண் 7 -ல் இருந்து இரண்டு குண்டு வெடிப்புகள் பதிவாகியுள்ளன. குண்டுவெடிப்புகள் குறித்து விசாரித்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு குறித்து கேள்விப்பட்டதும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த இடத்தை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை பொதுமக்களும், கடைக்காரர்களும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நரேந்தர் பாட்டியாலி கூறுகையில், "குண்டுவெடிப்பில் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவருக்கு வயிற்றில் காயம் ஏற்ரபட்டுள்ளதால், அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது" என்றார்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மேலும் குடியரசு தினவிழாவிற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. முன்னதாக, ஜனவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ரஜோரி மாவட்டம் தங்கர் கிராமத்தில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளில் 7 இந்துக்கள் கொல்லப்பட்டனர். கடந்த டிசம்பர் 28 ம் தேதி, நார்வாலில் இருந்து 11 கிமீ தொலைவில் உள்ள சித்ரா என்ற இடத்தில் கனரக ஆயுதங்களுடன் பாகிஸ்தானில் இருந்து ஜம்முற்குள் நுழைய முயன்ற பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். சமீபகாலமாக ஜம்மு பகுதியில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x