Published : 21 Jan 2023 09:48 AM
Last Updated : 21 Jan 2023 09:48 AM

காப்பீடுக்காக அப்பாவியை கொலை செய்த விவகாரம் - குற்றவாளியை காட்டிக் கொடுத்த தீயில் கருகாத கால்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், மேதக் மாவட்டம், டெக்மல் வெங்கடாபூர் பகுதியில் கடந்த 9-ம் தேதி, ஊருக்கு வெளியே திடீரென ஒரு கார் எரிய தொடங்கியது. பொதுமக்கள் ஓடிச்சென்று காப்பாற்றுவதற்குள், அதில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் உடல் கருகி இறந்து கிடந்தார். இது குறித்து மேதக் மாவட்ட போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தியதில், இதற்கெல்லாம் காரணம் தெலங்கானா தலைமை செயலகத்தில் பணியாற்றி வரும் தர்மா (48) என்ற ஊழியர்தான் என்பது தெரிய வந்தது. தலைமறைவாகி புனேவில் இருந்த அவரை போலீஸார் கைது செய்து மேதக்கில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைத்து வந்தனர்.

மேதக் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ரோஹிணி பிரியதர்ஷிணி கூறியதாவது:

அரசு ஊழியர் தர்மா சில கெட்ட பழக்க வழக்கங்களாலும், பங்கு பத்திரங்கள் வாங்கியதாலும் சுமார்ரூ.80 லட்சம் வரை கடனாளியானார். ஆதலால், திட்டம் தீட்டி சுமார் ரூ.7 கோடிக்கு மேல் 25 காப்பீடு பாலிசிகளை அவர் பெயரில் எடுத்தார்.

அதன் பின்னர் அவரை போன்றே தோற்றம் கொண்ட அஞ்சய்யா என்பவரை தனது நிலத்தில் பணியாற்ற நியமித்துள்ளார். அதற்காக அவருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியம் அளித்துள்ளார். ஆனால், அவரை கொலை செய்ய திட்டமிட்ட நாளன்று, அஞ்சய்யா மது குடித்திருந்ததால், பாலிசி பணம் கிடைக்காது என்று கருதி வேறொரு நாளில் கொலை செய்ய திட்டமிட்டார்.

ஆனால், அஞ்சய்யா திடீரென வேலைக்கு வரவில்லை. அதன்பிறகு பாபு என்பவரை சில நாட்களுக்கு முன் விவசாய பணி செய்ய அழைத்து வந்தார். கடந்த 9-ம் தேதி, தர்மாவும், அவரது உறவினர் நிவாஸ் (44) என்பவரும் இணைந்து பாபுவை தாசரா அம்மன் கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு கள் வாங்கி கொடுத்து, அவர் மயக்கமடைந்ததும் கொலை செய்துள்ளனர்.

பின்னர், பாபுவை கார் ஓட்டுநர் இருக்கையில் உட்கார வைத்து, அவர் மீதும், கார் மீதும் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பியுள்ளனர். இரவு நேரத்தில் கார் தீப்பற்றி எரிவதைப் பார்த்து போலீஸுக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், போலீஸார் கார் எண்ணை வைத்து இவர் தர்மாவாக இருக்கலாம் என முதலில் முடிவு செய்துள்ளனர்.

ஆனால், காரில் எரிக்கப்பட்ட பாபுவின் ஒரு கால் மட்டும் முழு வதுமாக கருகாமல் இருந்துள்ளது.

பொதுவாக அரசு ஊழியர்கள் நீண்ட நேரம் தண்ணீர், சேறு போன்ற பகுதிகளில் நடக்க மாட்டார்கள். அதனால் அவர்களுடைய கால்கள் வழுவழுப்பாகவே இருக்கும். நிலத்தில் பணியாற்றும் கூலி தொழிலாளியின் கால் போல் பல வெடிப்புகள் காணப்பட்டதால், அது தர்மாவின் உடல் அல்ல என போலீஸார் முடிவு செய்து விசாரணையை முடிக்கி விட்டனர். இறுதியில் புனேவில் பதுங்கி இருந்த தர்மாவையும், அவரது உறவினர் நிவாஸையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு கொலையில் சம்பந்தப்பட்ட தர்மாவின் மனைவி நீலா (43), அக்கா சுந்தா (49) மற்றும் தர்மாவின் 17 வயது மகன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். இவ்வாறு போலீஸ் கண்காணிப்பாளர் கூறினார்.

நிலத்தில் பணியாற்றும் கூலி தொழிலாளியின் கால் போல் பல வெடிப்புகள் காணப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x