Published : 20 Jan 2023 07:00 AM
Last Updated : 20 Jan 2023 07:00 AM

பிரதமர் மோடி குறித்த பிபிசி-யின் ஆவண படம் - ரிஷி சுனக் கண்டிப்பு

புதுடெல்லி: குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி கடந்த 17-ம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. “இந்தியா- மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.

யூடியூபில் வெளியான இந்த ஆவண படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் 2-ம் பாகம் வரும் 24-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி டெல்லியில் நேற்று கூறும்போது, “இந்தியாவுக்கு எதிராக ஆவணப் படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. பிபிசி ஆவண படத்தில் பாரபட்சம், காலனி ஆதிக்க மனப்பான்மை அப்பட்டமாக வெளிப்படுகிறது. இந்த ஆவண படம் கண்ணியமானது இல்லை” என்றார்.

பிரதமர் ரிஷி கண்டிப்பு: பிபிசி ஆவண படம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட எம்.பி.இம்ரான் ஹூசைன் நேற்று பிரச்சினை எழுப்பினார்.

அப்போது பிரதமர் ரிஷி சுனக் குறுக்கிட்டுப் பேசுகையில், “குஜராத் கலவரம் தொடர்பான இங்கிலாந்து அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலகின் எந்தபகுதியில் அநீதி நடந்தாலும் அதை தட்டிக் கேட்போம். ஆனால் ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x