இந்தியாவின் மிகப் பழைமையான வழக்கு கொல்கத்தா நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கொல்கத்தா: இந்தியாவின் மிகப் பழைமையான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. மேற்குவங்க தலைநகர் கொல்கத்தா அருகே பெர்ஹாம்பூர் அமைந்துள்ளது. அங்கு பெர்ஹாம்பூர் பேங்க் லிமிடெட் என்ற பெயரில் தனியார் வங்கி செயல்பட்டு வந்தது. வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், இந்த வங்கியை மூட கடந்த 1951-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து வங்கி நிர்வாகம் சார்பில் அதே ஆண்டில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வங்கி நிர்வாகத்துக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே மிக நீண்ட காலமாக சட்ட போராட்டம் நடைபெற்றது. வழக்கை தொடர்ந்த வங்கி நிர்வாகிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், எதிர்தரப்பு சார்பில் யாரும் ஆஜராகவில்லை. மிக நீண்ட காலமாக வழக்கில் யாரும் ஆஜராகாததால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதுகுறித்து மூத்த வழக்கறிஞர்கள் கூறும்போது, “72 ஆண்டுகளாக நீடித்து வந்த நாட்டின் மிகப் பழைமையான பெர்ஹாம்பூர் வங்கி வழக்கு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. மேற்குவங்கத்தின் மால்டா நீதிமன்றத்தில் 2 பழைமையான வழக்குகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பழைமையான வழக்கும் நிலுவையில் உள்ளன" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in