Published : 10 Jul 2014 01:44 PM
Last Updated : 10 Jul 2014 01:44 PM

ஜி.எஸ்.டி. இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படலாம்: ஜேட்லி

பொருள்கள் மற்றும் சேவை வரி (GST) இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட ஆவன செய்யப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

உற்பத்தி வரி, சேவை வரி, மதிப்புக்கூட்டு வரி என்று நாட்டின் வரிவிதிப்புகள் இலக்கில்லாமல் இருந்து வந்துள்ளது என்று கூறிய அவர், வரிவிதிப்புகளை ஒருமுனைப்படுத்த ஜி.எஸ்.டி. முறையைக் கொண்டு வர இந்த ஆண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

இந்தியாவில் உற்பத்திச் செய்யப்படும், அல்லது இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்தின் மீதும் விதிக்கப்படும் மறைமுக வரியே ஜி.எஸ்.டி.

"நாட்டின் வரி நிர்வாகத்தை ஒருமுகப்படுத்தும் நோக்கத்துடன் ஜி.எஸ்.டி முறையை நடைமுறைப்படுத்துவது அவசியம், மேலும் மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்கு இதன் மூலம் பெரிய அளவில் வரிவருவாய் கிட்டும்” என்றார் அருண் ஜேட்லி.

ஜி.எஸ்.டி. முறையை கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி எடுத்தது. ஆனால் மாநில அரசுகள் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஜி.எஸ்.டி. விதிப்பினால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு போதுமான அளவுக்கு ஈடுகட்டுவதில்லை என்று மாநில அரசுகள் ஜி.எஸ்.டி-யிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையினால் பொருளாதார வளர்ச்சி 2% அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான நிகர வரிகள் குறைந்தாலும், ஒட்டுமொத்த வரிவசூலை இது அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x