

அர்ச்சனா ராமசுந்தரம் வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் மூன்று வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர் வாணைய தலைவராக இருந்தார். அவருக்கு சிபிஐ கூடுதல் இயக்குநர் பதவி வழங்கப்பட்டதால் அப்பணியில் சேர்ந்தார். இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பச்னந் தாவை நியமிக்காமல், அர்ச்சனா ராம சுந்தரத்தை மத்திய அரசு நியமித்தது தவறு என்று கூறி, வினித் நாராயண் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார்.
தமிழக அரசு முறையாக பணியிலிருந்து விடுவிக்காத நிலையில், அர்ச்சனா மத்திய அரசுப் பணியில் சேர்ந்தது தவறு என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி தமிழக அரசு மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, மத்திய அரசு மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுவரை அர்ச்சனா ராமசுந்தரம் கூடுதல் சிபிஐ இயக்குநராக பதவியேற்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.