Published : 30 Dec 2022 05:41 PM
Last Updated : 30 Dec 2022 05:41 PM

காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைகிறாரா குலாம் நபி ஆசாத்?

குலாம் நபி ஆசாத்

புதுடெல்லி: ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு வர உள்ளதால், அதில் பங்கேற்க குலாம் நபி ஆசாத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் மீண்டும் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய ஒற்றுமை யாத்திரை: காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா என பல்வேறு மாநிலங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, தலைநகர் டெல்லியை கடந்த வாரம் வந்தடைந்தார். இதையடுத்து, கடந்த 25ம் தேதி முதல் வரும் ஜனவரி 2-ம் தேதி வரை யாத்திரைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 3-ம் தேதி யாத்திரை மீண்டும் தொடங்க இருக்கிறது.

யாத்திரையில் பிரபலங்கள் பங்கேற்பு: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். டெல்லியில் நடைபெற்ற யாத்திரையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், திமுக பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த யாத்திரை ஜம்மு காஷ்மீருக்குச் செல்லும்போது அதில் பங்கேற்க குலாம் நபி ஆசாத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களும் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

அம்பிகா சோனி மூலம் தூது: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவருமான அம்பிகா சோனி மூலம் குலாம் நபி ஆசாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலில் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்குமாறும், அப்போது ராகுல் காந்தியிடம் நேரடியாக பேசுமாறும் குலாம் நபி ஆசாத்தை அம்பிகா சோனி கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து, காங்கிரஸில் மீண்டும் இணைவது குறித்து முடிவு எடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தான் தொடங்கி உள்ள ஜனநாயக சுதந்திர கட்சி வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், காங்கிரஸில் மீண்டும் இணைய வாய்ப்பு இல்லை என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்பது குறித்து இன்னும் அவர் கருத்து தெரிவிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x