Published : 30 Dec 2022 10:08 AM
Last Updated : 30 Dec 2022 10:08 AM

சோகத்துடன் தோளில் சுமந்து சென்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்

அகமதாபாத்: உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். பிரதமர் மோடி சோகத்துடன் தாயாரின் உடலைச் சுமந்து சென்றார். பின்னர், அவரது தயாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி. குஜராத்தின் காந்தி நகரில் உள்ள பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் உள்ள தனது இளைய மகனும் பிரதமர் மோடியின் சகோதருமான பங்கஜ் மோடியின் வீட்டில் ஹீராபென் மோடி வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்தநிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தனது தாயார் மறைவையத் தொடர்ந்து பிரதமர் மோடி அகமதாபாத் விரைந்தார். அங்கு தனது தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

பிரதமர் மோடி தாயாரின் இறுதிச் சடங்கு அகமாதபாத்தில் இன்று காலை 9.30 மணியளவில் மிகவும் எளிமையான முறையில் நடந்தது. வீட்டில் வைத்து தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஹீராபென்னிற்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்த இறுதிச்சடங்கில் பிரதமர் மோடியின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, உறவினர்களுடன் தனது தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு சடங்குகளுக்கு பின்னர், தாயாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக, தாயார் உயிரிழந்ததை பிரதமர் மோடியே முதன்முதலில் அறிவித்தார். தாயின் மறைவை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு போற்றத்தக்க நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் என் தாயிடம் உணர்ந்தேன். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்று 100வது பிறந்தநாளின்போது சந்தித்த போது என் தாய் சொன்ன வார்த்தைகள் எப்போதும் என் நினைவில் இருக்கும்" என்று உருக்கமாக பதிவிட்டார்.

இன்று கொல்கத்தா மாநிலம் ஹவுராவில் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கிவைக்க இருந்தார். மேலும் சில வளர்ச்சிப் பணிகளையும் தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஹீராபென் மறைவால் இந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திட்டங்களை தொடங்கிவைப்பார் என்று பிரதமர் அலுவலகம் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x