Published : 27 Dec 2022 12:37 PM
Last Updated : 27 Dec 2022 12:37 PM

நூறு நாள் வேலைத்திட்டத்தில் டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு: ஜனவரி 1-ல் தொடக்கம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

புதுடெல்லி: நூறு நாள் வேலைத்திட்டம் என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் வருகை வரும் ஜனவரி ஒன்று முதல் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசால் கடந்த 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஒரு நிதி ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ரூ. 214 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான வருகைப் பதிவை டிஜிட்டல் மயாக்கும் பணி கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. தேசிய மொபைல் கண்காணிப்பு முறை மூலம் இதற்காக ஒரு செயலி உருவாக்கப்பட்டு அதன் மூலம் வருகை பதிவு செய்யப்படுகிறது.

தேசிய அளவில் பயன்படுத்தப்படும் இந்த செயலியில், வருகைப் பதிவு தேதி, மாநிலம், மாவட்டம், ஒன்றியம், பஞ்சாயத்து, பணியாளருக்கான பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் நாள்தோறும் பதிவு செய்யப்படுகின்றன. இந்த செயலியில் சில குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் டிஜிட்டல் முறை வருகைப் பதிவை தொடங்குவதற்கு முன் இதில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.

குறைகள் குறித்த புகார்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனினும், இந்த செயலி வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் கட்டாய அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பயனாளர்கள் அனைவரும் தங்களின் வருகைப் பதிவை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x