தேர்தலுக்கு முன் தேநீர் விற்ற மோடி தற்போது பேடிஎம்-ஐ ஆதரிக்கிறார்: மம்தா மீண்டும் சாடல்

தேர்தலுக்கு முன் தேநீர் விற்ற மோடி தற்போது பேடிஎம்-ஐ ஆதரிக்கிறார்: மம்தா மீண்டும் சாடல்
Updated on
1 min read

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக அயராது எதிர்ப்புக் குரல் எழுப்பி வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா, முன்பு ‘சாய்வாலா’வாக இருந்த மோடி தற்போது ‘பேடிஎம்வாலா’வாகிவிட்டார் என்று சாடியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் பாங்குராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, “தேர்தலுக்கு முன்பு அவர் தேநீர் விற்றவர், தற்போது பேடிஎம் ஆதரவாளர். சாதாரண மக்களின் துயரங்கள் மோடி அரசின் காதுகளுக்கு விழுவதில்லை, சாமானிய மக்களின் துயரங்களைப் பேச முடியாத ஊமையாகிவிட்டது.

சாமானிய மக்கள் நெருக்கடியை புரிந்து கொள்கின்றனர், ஆனால் பிரதமர் எப்போது புரிந்து கொள்ளப்போகிறார் என்று தெரியவில்லை. அவர் இதனை உணரும் தருணத்தில் பேரிடர் ஏற்பட்டிருக்கும்.

எந்த மொபைல் போன் வாங்க வேண்டும் என்பதை நீங்கள் எப்படி கூற முடியும்? எந்த ஆப் டவுன்லோடு செய்ய வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் கூற முடியுமா? அல்லது எங்கு பணத்தைப் போட வேண்டுமென்றுதான் நீங்கள் கூற முடியுமா?

பிரதமர் தன்னைத் துறவி என்று கூறினார், ஆனால் மக்கள்தான் தற்போது காசுபணமில்லா துறவிகளாகியுள்ளனர்” என்றார் மம்தா பானர்ஜி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in