Rewind 2022 | இந்தியாவில் இருந்து 75 நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி - பாதுகாப்பு அமைச்சகம் செய்தது என்ன?

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

புதுடெல்லி: 2022 ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 75 நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ஆண்டு பாதுகாப்புத் துறை செயல்பாடுகளின் முக்கிய அம்சங்களைப் பற்றிய பதிவு:

அக்னிபாத்- பெரிய சீர்திருத்த மாற்றம்: ஆயுதப் படைகளில் இளைஞர்களைச் சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டம் ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. தேசபக்தியுள்ள இளைஞர்கள் (அக்னிவீரர்கள்) புனித சீருடையை அணிந்து நான்கு ஆண்டுகளுக்கு நாட்டிற்கு சேவை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இத்திட்டத்தில் மாதாந்திர ஊதியம், பணிக் காலம் முடிந்ததும் வழங்கப்படும் 'சேவா நிதி' தொகுப்பும் உள்ளடக்கி உள்ளது. ஆயுதப் படைகளில் சேருவதற்காக, 54 லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் பெறப்பட்டுள்ளன.

ஐஎன்எஸ் விக்ராந்த் - 'தற்சார்பு இந்தியா' - இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் செப்டம்பர் மாதம் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பிரதமரால் தொடங்கப்பட்டது. இந்த ஆணையமானது நாட்டின் வளர்ந்து வரும் உள்நாட்டு உற்பத்தித் திறனையும், 'தற்சார்பு இந்தியா’ வை நோக்கிய பாதையில் ஒரு முக்கிய மைல்கல் சாதனையைப் படைத்திருக்கிறது. 76% உள்நாட்டு பொருட்களுடன் உருவாக்கப்பட்ட, 262.5 மீ நீளமும் 61.6 மீ அகலமும் கொண்ட இந்தக் கப்பலில் அதிநவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன, இது சுமார் 1,600 அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கொண்ட குழுவினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்தியக் கடற்படையில், விமானப்படைக் குழு, ஏவுகணை அழிப்பு கப்பல்கள் உள்ளிட்ட இதர வசதிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

மத்திய பட்ஜெட் 2022-23: 2022-23 பட்ஜெட்டில் பாதுகாப்பு சேவைகளின் மூலதன ஒதுக்கீட்டின் கீழ் மொத்த ஒதுக்கீடு ரூ.1.52 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. மூலதன கொள்முதல் பட்ஜெட்டில் 68% உள்நாட்டு தொழில்துறையின் தன்னிறைவை மேம்படுத்தவும் இறக்குமதி சார்ந்திருப்பதை குறைக்கவும் இத்தொகை ஒதுக்கப்பட்டது.

பாதுகாப்பு ஏற்றுமதி: அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக, பாதுகாப்பு ஏற்றுமதி கடந்த ஐந்து ஆண்டுகளில் 334% அதிகரித்து, 2021-22 நிதியாண்டில் ரூ.13,000 கோடியைத் தொட்டது. இந்தியா தற்போது 75 நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

பாதுகாப்புக் கண்காட்சி 2022: 2022-ல் 12-வது பாதுகாப்புக் கண்காட்சி - 'பெருமித்துக்கான பாதை' என்ற தலைப்பில் உலக அளவில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்வதற்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 1,340 கண்காட்சியாளர்கள், வணிக நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், ஸ்டார்ட் அப்கள், எம்எஸ்எம்இ-கள், ஆயுதப்படைகள் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இணையற்ற பங்கேற்பைக் கண்டனர்.

இந்தக் கண்காட்சி முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. 2025 ஆம் ஆண்டுக்குள் ரூ.35,000 கோடி ஏற்றுமதியுடன் பாதுகாப்புத் துறையின் நோக்கம் எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 451 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்நுட்ப ஒப்பந்தங்கள், தயாரிப்பு வெளியீடுகள் மற்றும் உள்நாட்டு வணிகங்களுக்கான ஆர்டர்கள் ஆகியவை கண்காட்சியின் வெற்றியைப் பறைசாற்றுவதாக அமைந்தன.

பிரம்மோஸ், பிருத்வி, அக்னி போன்ற நவீன ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

100 புதிய சைனிக் பள்ளிகளை அமைத்தல் (Sainik Schools): அரசு சாரா நிறுவனங்கள்/தனியார்/மாநில அரசுகளுடன் இணைந்து 6-ஆம் வகுப்பு முதல் தரப்படுத்தப்பட்ட முறையில் 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்கும் முயற்சிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முயற்சியின் கீழ், 18 பள்ளிகளுடன் சைனிக் பள்ளிகள் சங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது. இன்றைய நிலவரப்படி, இந்த 18 பள்ளிகளில் 17 பள்ளிகளில் மொத்தம் 1,048 (912 சிறுவர்கள் மற்றும் 136 பெண்கள்) மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். மேலும் 17 பள்ளிகளில் 2022-23 ஆம் ஆண்டு கல்வி அமர்வு தொடங்கியுள்ளது.

பெண் குழந்தை சேர்க்கை: 2018-19 மற்றும் 2019-20 கல்வியாண்டில் சிங்கிப்பில் தொடங்கப்பட்ட சைனிக் பள்ளி முன்னோடித் திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு, ஆந்திரா, உத்தராகண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு பள்ளியும், கர்நாடகத்தில் இரண்டு பள்ளிகளுமாக, மேலும் ஐந்து சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளைச் சேர்க்க அரசு முடிவு செய்தது. இன்றைய நிலவரப்படி, இந்தப் பள்ளிகளில் 698 மாணவிகள் தங்கிப் படிக்கின்றனர். தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் நுழைவதற்கான முதல் படியாக இது பார்க்கப்படுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in