

புதுடெல்லி: சீனாவில் அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. உருமாறிய கரோனா தொற்று பாதிப்பை கண்டறியும் வகையில் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.
இது தவிர பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அலர்ட்டை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இந்தச் சூழலில் உருமாறிய XBB வேரியன்ட் கரோனா குறித்த ஒரு செய்தி வாட்ஸ்அப்பில் வைரலாகி உள்ளது. அதில் XBB வேரியன்ட் மிகவும் தீவிரமானது என்றும், டெல்டா வேரியன்டை விட ஐந்து மடங்கு அதிக வீரியம் மிக்கது மற்றும் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும் அந்த வாட்ஸ்அப் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தச் செய்தி போலி என்றும், அதை யாரும் நம்ப வேண்டாம் மற்றும் பகிர வேண்டாம் எனவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தற்போது சீனாவில் ஏற்பட்டுள்ள கரோனா பரவல் பாதிப்புக்கு காரணம் BF.7 எனும் உரிமாறிய கரோனா என சொல்லப்பட்டுள்ளது. IHME ஆய்வின்படி XBB வேரியன்ட் அதிகளவில் பரவக்கூடியதாக இருந்தாலும் நோய்த்தொற்றின் தீவிரத்தன்மை பெரிய அளவில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.