கர்நாடக சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் படம் திறப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் படம் திறப்பு
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் உள்ள சுவர்ணசவுதாவில் நேற்று தொடங்கியது. பேரவை உள்ளே பசவண்ணர், விவேகானந்தர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், சர்தார் வல்லபபாய் படேல், நேதாஜி, வீர சாவர்க்கர் உள்ளிட்டோரின் உருவப் படங்களை பேரவைத் தலைவர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி திறந்து வைத்தார்.

வீர சாவர்க்கரின் படம் திறக்கப்பட்ட போது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவையின் மையப் பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், “வீர சாவர்க்கர் படம் திறக்கப்பட்டதை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. சர்ச்சைக்குரிய ஒருவரின் படத்தை திறப்பது ஏன் என கேட்க விரும்புகிறோம். மக்களின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்காமல், சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது? வீர சாவர்க்கரின் படத்தை திறந்த அரசு, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் படத்தை ஏன் திறக்கவில்லை?” என கேள்வி எழுப்பினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in