ராணுவத்துக்கு எதிராக பேசும் ராகுல் காந்தி நாட்டின் மிகப்பெரிய அவமானம்: கிரண் ரிஜிஜு புகார்
இடாநகர்: அருணாச்சல பிரதேச எல்லை பாதுகாப்பாக உள்ளது. இந்திய ராணுவத்தை அவமதிக்கும் ராகுல் காந்தி நாட்டுக்கே மிகப்பெரிய அவமானம் என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டியுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டம், யாங்சி எல்லைப் பகுதியில் கடந்த 9-ம் தேதி 600-க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி விரட்டியடித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறும்போது, “இந்தியாவின் 2,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்களை சீன ராணுவம் கொலை செய்திருக்கிறது. தற்போது அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய வீரர்கள் மீது சீன வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சீனா போருக்கு தயாராகி வருகிறது. மத்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.
இந்த சூழலில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, தவாங் மாவட்டம், யாங்சி பகுதிக்கு நேரில் சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் நேற்று புகைப்படம் வெளியிட்டு கூறியிருப்பதாவது:
ராணுவத்தை மட்டுமல்ல, நாட்டையும் ராகுல் அவமதித்து வருகிறார். அவர் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பிரச்சினை யாக இருக்கிறார். நாட்டுக்கு மிகப்பெரிய அவமானமாகவும் உள்ளார். இந்திய ராணுவம் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம். அருணாச்சல பிரதேசத்தின் யாங்சி எல்லைப் பகுதி பாதுகாப்பாக உள்ளது. இந்திய ராணுவத்தின் வீர, தீரமிக்க வீரர்கள் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அருணாச்சல் மேற்கு மக்களவைத் தொகுதி எம்.பி.யாக கிரண் ரிஜிஜு உள்ளார். இந்த தொகுதியின் கீழ் தவாங் மாவட்டம் வருகிறது.
ராகுலை நீக்க வேண்டும்: பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நேற்று கூறும் போது, ‘‘இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்குமா? காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியில் இருந்து ராகுல் காந்தியை நீக்குவாரா? அவர் சுயமாக செயல்படும் தலைவர் என்றால், காங்கிரஸில் இருந்து ராகுலை நீக்க வேண்டும்’’ என்றார்.
