Published : 03 Dec 2016 08:11 PM
Last Updated : 03 Dec 2016 08:11 PM
பிரதமர் நரேந்திர மோடி தான் ஒரு துறவி என்று கூறியதையடுத்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மோடி ஒரு செல்வந்த்ரே என்று பதிலடி கொடுத்துள்ளார்.
லக்னோவில் செய்தியாளர்களைச் சந்தித்த மாயாவதி கூறியதாவது:
செல்வந்தர்களைக் காப்பவர் எப்படி துறவி என்று தன்னைக் கூறி கொள்ள முடியும்? அவர் துறவியல்ல. அவர் பெரும் செல்வந்தர்தான்.
நோட்டு நடவடிக்கையினால் நாட்டின் 90% சாமானிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது அவரது எதேச்சதிகார போக்கையே காண்பிக்கிறது.
மோடி அரசின் தவறான போக்குகளுக்கு எதிராக பகுஜன் மக்களவைக்கு உள்ளேயும் வெளியேயும் நிச்சயம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும். ஊழலை ஒழிப்பதற்காகவே வந்ததாக கூறிக்கொள்ளும் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஏன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றவில்லை?
இவர் குஜராத் முதல்வராக இருந்த போது லோக் ஆயுக்தாவை செயலிழக்கச் செய்தவர்தான். ஊழலை ஒழிக்கிறேன் என்று இவர்கள் கூறுவதெல்லாம் வெறும் கண் துடைப்புதான்.
கறுப்பை வெள்ளையாக மாற்ற வருமான வரிச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதுதான் மோடி சர்க்கார். உ.பி.யில் பணத்திற்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள் மீது போலீஸ் தங்கள் அதிகாரத்தைக் காட்டி வருகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-வை உ.பி.மக்கள் ஒன்றுமில்லாமல் செய்வார்கள். 2019 லோக்சபா தேர்தலில் மக்கள் அவரை மீண்டும் குஜராத்திற்கே அனுப்பி வைப்பார்கள்.
இவ்வாறு கூறினார் மாயாவதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT