1000, 2000 ரூபாய் நோட்டுகள் பாஜக ஆட்சியில்தான் அறிமுகம்: காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் குற்றச்சாட்டு

1000, 2000 ரூபாய் நோட்டுகள் பாஜக ஆட்சியில்தான் அறிமுகம்: காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் குற்றச்சாட்டு
Updated on
1 min read

கறுப்புப் பணம் பதுக்குவோருக்கு உதவும் அதிக மதிப்புள்ள 1000, 2000 ரூபாய் நோட்டுகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போதுதான் அறிமுகம் செய்யப்பட்டன என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் கறுப்புப் பணத்தை ஒழிக்க காங்கிரஸ் ஒத்துழைப்பு தரவில்லை என்றும் நாட்டு நலனைவிட கட்சியின் நலனுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கூறியதாவது:

சுதந்திரத்துக்குப் பிறகு முதன் முறையாக கடந்த 1978-ல்தான் பணமதிப்பு நீக்கம் செய்யப் பட்டது. அப்போது, மொரார்ஜி தேசாய் பிரதமராகவும் அடல் பிஹாரி வாஜ்பாய் கேபினெட் அமைச்சராகவும் இருந்தார். ஆனால், இந்த நடவடிக்கையால் பலன் கிடைக்கவில்லை. எனவேதான் வாஜ்பாய் பிரதமரானபோது பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.

மாறாக, வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியின்போதுதான் மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்காக அவர் நாட்டு நலனைவிட கட்சியின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்று சொல்ல முடியுமா?

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள்தான் கறுப்பு பணம் பதுக்குவோருக்கு மிகவும் வசதியாக உள்ளது. எனவே, கறுப்புப் பணத்தை ஊக்குவிப்பது எந்தக் கட்சி என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in