நொய்டா ஆக்சிஸ் வங்கிக் கிளையில் போலி நிறுவனங்களின் பெயரில் ரூ.60 கோடி டெபாசிட்

நொய்டா ஆக்சிஸ் வங்கிக் கிளையில் போலி நிறுவனங்களின் பெயரில் ரூ.60 கோடி டெபாசிட்
Updated on
1 min read

நொய்டா நகரின் ஆக்சிஸ் வங்கிக் கிளை ஒன்றில் வருமான வரித் துறையினர் வியாழனன்று நடத்திய சோதனையில் 20 போலி நிறுவனங்களின் பெயரில் ரூ.60 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

நொய்டா நகரின் 51-வது செக்டாரில் உள்ள இந்த வங்கியில் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 20 போலி நிறுவனங்களின் பெயரில் உள்ள கணக்குகளில் ரூ.60 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்நிறுவனங்களின் இயக்குநர்களை அடையாளம் காண்பதற்காக ஆவணங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு நகைக்கடை அதிபர் ஒருவர் ரூ.600 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை விற்பனை செய்ததை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்தனர். இந்த நகைக் கடை அதிபர் மேற்கண்ட வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ள நிலையில், வருமான வரித் துறை ஆய்வு மேற்கொண்டது.

இந்த நகைக்கடை அதிபரின் பெயரை வருமான வரித் துறை இதுவரை வெளியிடவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in