Published : 12 Dec 2022 01:18 PM
Last Updated : 12 Dec 2022 01:18 PM

உச்ச நீதிமன்ற நீதிபதியாக திபங்கர் தத்தா பதவியேற்பு

உச்ச நீதிமன்ற நீதிபதியாக திபங்கர் தத்தா பதவியேற்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி திபங்கர் தத்தா இன்று(டிச. 12) பதவியேற்றார். இதனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சாலில் குமார் தத்தாவின் மகனான திபங்கர் தத்தா, கடந்த 2006ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். இதையடுத்து, கடந்த 2020 ஏப்ரல் 28ம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக திபங்கர் தத்தாவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த யு.யு. லலித் தலைமையிலான கொலிஜியம், இவரை உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய சட்ட அமைச்சகம், அதற்கான நியமன உத்தரவை நேற்று வெளியிட்டது. இதையடுத்து, திபங்கர் தத்தா உச்ச நீதிமன்ற நீதிபதியாக இன்று பதவி ஏற்றார். அவருக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்தரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக திபங்கர் தத்தா பதவியேற்றதை அடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட 34 பேர் நீதிபதிகளாக இருக்க முடியும். தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ள திபங்கர் தத்தா, 1965, பிப்ரவரி 9ம் தேதி பிறந்தவர். இவருக்கு தற்போது 57 வயதாகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65 என்பதால் இவர் 2030 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்ற முடியும். இவர் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியான அமிதவ ராயின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x