

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் இருந்தாலும் கைக்கு கிடைக்கவில்லை என்று பாரதிய கிசான் சங்கம் கூறியுள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவர் நரேஷ் திகைத், முசாபர்நகரில் நேற்று மேலும் கூறும்போது, “விவசாயிகள் வங்கியின் வாசலில் நாள் முழுவதும் காத்திருந்தாலும் அவர்களுக்கு ரூ.2000 மட்டுமே தரப்படுகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் முசாபர்நகர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் ஆயத்த ஆடை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 6 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்” என்றார்.
முசாபர்நகர் மாவட்டத்தின் கக்ரோலி என்ற இடத்தில் ஸ்டேட் வங்கிக் கிளைக்கு வாடிக்கையாளர்கள் நேற்று பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். பெண் ஒருவரை வங்கிப் பணியாளர் ஒருவர் கண்ணியக்குறைவாக பேசியதாக கூறி வாடிக்கையாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் வந்து அவர்களை சமாதானம் செய்தனர்.
இதே மாவட்டத்தில் மற்றொரு சம்பவமாக, கந்த்லா நகரில் ஸ்டேட் வங்கி கிளை முன்பு நகராட்சி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். வங்கிக் கணக்கில் போடப்பட்ட தங்கள் சம்பளத்தை பெறமுடியவில்லை என்று கூறி இவர்கள் போராட்டம் நடத்தினர்.