Published : 08 Dec 2022 04:06 PM
Last Updated : 08 Dec 2022 04:06 PM

குஜராத்தில் வரலாற்று வெற்றியுடன் மீண்டும் பாஜக ஆட்சி; இமாச்சலைக் கைப்பற்றியது காங்கிரஸ்

அகமதாபாத் / ஷிம்லா: குஜராத்தில் வரலாற்று வெற்றியுடன் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 2022-ஆம் ஆண்டின் கடைசித் தேர்தலாக அமைந்துவிட்ட குஜராத் சட்டப்பேரவை, இமாச்சலப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவும், காங்கிரஸும் தலா ஒரு வெற்றியோடு நிறைவு செய்துள்ளன. இந்தத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அது பற்றிய தொகுப்பு இதோ..

குஜராத்தில் வரலாற்று வெற்றி: குஜராத்தைப் பொறுத்தவரை பாஜக தனது சொந்த வரலாற்று சாதனையை உடைத்தது மட்டுமல்லாமல், புதிய வரலாற்றையும் படைத்துள்ளது. கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு க்ளீன் ஸ்வீப் என்று சொல்லும் அளவிற்கு வெற்றி வாய்ப்பு அமையவில்லை. அதற்கு காரணம் தேர்தலுக்கு சமீபமாக நடந்து முடிந்திருந்த பட்டிதார் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டம். ஹர்திக் படேல் முன்னெடுத்த அந்தப் போராட்டம் பாஜகவுக்கு எதிர்ப்பலைகளை உருவாக்கியது. அதனால் 99 இடங்களைக் கைப்பற்றியது. 100-க்கும் கீழான தொகுதிகளில் மட்டுமே வெற்றி என்பது பாஜக தனிப்பட்ட முறையில் சறுக்கலாகவே கருதியது. ஆனால், இந்த முறை வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது பாஜக. கடந்த முறை வாக்குகள் சிதறக் காரணமாக இருந்த ஹர்திக் படேல் இந்த முறை பாஜக வேட்பாளர். அந்த அளவுக்கு தேர்தல் உத்திகளை சிறப்பாக வகுத்து சொன்னபடியே வரலாற்று வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது.

கட்சி தொகுதிகள்
பாஜக 158
காங்கிரஸ் 16
ஆம் ஆத்மி 5
பிற 3

இதுவரை குஜராத் அரசியல் வரலாற்றில் பாஜகவின் கோல்டன் பீரியட் என்றால், அது 2002-ல் அக்கட்சி 127 இடங்களைப் பிடித்ததுதான் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. ஆனால் இப்போது 182 தொகுதிகளில் 158 தொகுதிகளை வசப்படுத்தி வரலாற்றுச் சாதனையை பாஜக பதிவு செய்துள்ளது. குஜராத் தேர்தல் வரலாற்றில் இதற்கு முன்னதாக காங்கிரஸ் 1985-ல் 182 தொகுதிகளில் 149 தொகுதிகளைக் கைப்பற்றியதே அதிகபட்ச வெற்றியாக இருந்தது.

மங்காத மோடி அலை: குஜராத் தேர்தலுக்காக பிரதமர் மோடி தொடர்ச்சியாக பலகட்டப் பிரச்சாரங்கள், பேரணிகள், ரோட் ஷோக்கள் என்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் வெற்றி பெற்ற பின்னர் அடுத்த நாள் அதற்கான வெற்றிப் பேரணியை மோடி குஜராத்தில் தான் நடத்தினார். உண்மையில் அவர் அப்போதே குஜராத் தேர்தலுக்கான முதல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார். அதற்கான பலன் இன்று கிடைத்துள்ளது. 'நான் உருவாக்கிய குஜராத்' என்று அவர் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால், எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி மோடி அலை மங்கவில்லை. இன்னும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவின் முகமாக தாமே இருப்பேன் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தேய்ந்துபோன காங்கிரஸ்: 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் 14 எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவினர். அதனால் அதன் பலம் சட்டப்பேரவையில் எடுபடவில்லை. இந்நிலையில், இந்தத் தேர்தலில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் களத்தில் இறங்கி வேலை செய்வதில் விறுவிறுப்பைக் காட்டவில்லை. தோல்வியை முன் கூட்டியே கணித்துக் கொண்டதுபோல் நாங்கள் அமைதியாக காய் நகர்த்துகிறோம் என்று பகிரங்கமாகவே அறிவித்தது. சொல்லப்போனால் 1985க்குப் பின்னர் காங்கிரஸ் குஜராத்தில் தொடர்ந்து தேய்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இந்தத் தேர்தலில் குஜராத்தில் ஆம் ஆத்மி தனது இருப்பை உறுதி செய்தவிதம் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாஜகவை எதிர்த்து பிரதமர், உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலத்திலேயே அரவிந்த் கேஜ்ரிவாலும், பகவந்த் மானும் மேற்கொண்ட துணிச்சலான பிரச்சாரம் தான் அதற்கு 4 முதல் 7 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.

இமாச்சலைக் கைப்பற்றிய காங்கிரஸ்: இமாச்சலப் பிரதேச தேர்தலைப் பொறுத்தவரை பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ். கடந்த 2017 தேர்தலில் பாஜக 44 என்ற எளிதான வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் மட்டுமே வென்றது. சிபிஎம் ஒரு தொகுதியிலும் சுயேட்சைகள் இருவரும் வென்றிருந்தனர். இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் கூட ஆரம்பக்கட்ட முடிவுகள் ஒரு எளிதான வெற்றியை நோக்கி காங்கிரஸை இட்டுச் செல்லவில்லை. நீண்ட இழுபறிக்குப் பின்னர் பிற்பகலில் இருந்தே காங்கிரஸின் வெற்றி உறுதியானது. அண்மைத் தகவலின் படி காங்கிரஸ் 39 தொகுதிகளில் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. பாஜக 26 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சுயேட்சைகள் 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். 68 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட இமாச்சலில் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே போதும். ஹாஃப் வே மார்க் எனப்படும் 35 தொகுதியை தாண்டியும் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தாலும் கூட கட்சித் தாவல் கலக்கத்தில் தலைவர்கள் உள்ளனர்.

கட்சி தொகுதி
காங்கிரஸ் 39
பாஜக 26
பிற 3

இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பாஜக சுயேட்சைகளின் ஆதரவைக் கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே, காங்கிரஸில் இருந்து தாவும் எம்எல்ஏக்கள் ஆதரவையும் திரட்டலாம் என்பதால், காங்கிரஸ் முன்னெச்சரிக்கையாக தனது எம்எல்ஏக்களை பத்திரப்படுவதாக தெரிகிறது. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ஹரியாணா முதல்வர் பூபீந்திர சிங் ஹூடாவிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா அளித்தப் பேட்டியில், "சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலும் நானும் சண்டிகர் செல்கிறோம். அங்கு முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடைவை சந்திக்கிறோம். பின்னர் கலந்தாலோசித்து இமாச்சல் எம்.எல்.ஏ.க்களை சண்டிகர் அழைப்பதே இல்லை சிம்லாவில் தங்கவைப்பதா என்று முடிவு செய்கிறோம்" என்று கூறியுள்ளார்.

ஸ்கோர் செய்த பிரியங்கா: உத்தரப் பிரதேசத் தேர்தலில் சோபிக்க முடியாமல் போன காங்கிரஸ் இமாச்சலிலும் சொதப்பிவிடுமோ என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதுவும் பிரியங்கா காந்தி இமாச்சலில் தனிக்கவனம் செலுத்த ஆரம்பித்த பின்னர் இத்தகைய விமர்சனங்கள் மேலோங்கின. இந்நிலையில், காங்கிரஸின் வெற்றியை இமாச்சலில் உறுதி செய்ய உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பெரும் பங்காற்றியுள்ளார். அவரது பிரச்சாரம் இமாச்சல் மக்கள் மத்தியில் காங்கிரஸ் அபிமானத்தை மீட்டெடுத்ததாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் சூழலில், பிரியங்கா காந்தி இமாச்சல் காங்கிரஸ் பிரமுகர்களுடன் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தேர்தல் வெற்றிக்கான புகழ் பிரியங்காவையே சேரும் என்று உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் பெருமிதத்தோடு தெரிவிக்கின்றனர்.

வரலாற்று வெற்றியை கொண்டாடுவது தோல்விகளை அலசுவதா? - குஜராத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றிருந்தாலும் கூட நேற்று நடந்த டெல்லி மாநகராட்சித் தேர்தலில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் தோல்வியைத் தழுவியது பாஜக. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட மாநகராட்சி தேர்தலில் பாஜகவின் தோல்வி அதற்கு பெரும் பின்னடைவுதான்.

அதுபோல், உத்தரப் பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் 6 சட்டப்பேரவைகளுக்கும், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் அனைத்திலும் பாஜக பின்தங்கியுள்ளது. பிகாரின் குர்ஹானி, சத்தீஸ்கரின் பனுப்ரதாப்பூர், ஒடிசாவின் பாதம்பூர், ராஜஸ்தானின் சர்தார் சாகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்தில் ராம்பூர் சதார், கத்துவாலி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், மெயின்புரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனால் வரலாற்று வெற்றியைக் கொண்டாடுவது ஒருபுறம் இருக்க தோல்விகளை பற்றி கலந்தாலோசிப்பதும் இன்னொரு புறம் நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x