Published : 06 Dec 2022 05:34 AM
Last Updated : 06 Dec 2022 05:34 AM

உதவியின் பெயரால் மதமாற்றம் செய்வது தவறு - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி: உதவியின் பெயரில் மதமாற்றத்தில் ஈடுபடுவது தவறு என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு குஜராத் சட்டப்பேரவையில், “குஜராத் மதச் சுதந்திர சட்டம் 2021” நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் தின்படி ஒருவரை கட்டாயமாக மதம் மாற்றினாலோ, அதற்கு உதவி செய்தாலோ 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த சட்டத்தின் 5-வது பிரிவின்படி, ஒருவர் மதம் மாற விரும்பினால் அந்த நபர் மாவட்ட ஆட்சியரிடம் முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும். அவருக்கு மதமாற்ற சடங்குகளை செய்யும் மதத் தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

குஜராத் மதச் சுதந்திர சட்டத்தை எதிர்த்து உலமா இ ஹிந்த் என்ற அமைப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், சட்டத்தின் 5-வது பிரிவை அமல்படுத்த கடந்த ஆண்டு ஆகஸ்டில் தடை விதித்தனர். இதை எதிர்த்து குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனிடையே பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், மனிதாபிமான உதவி, பொருளாதார உதவி, பரிசு பொருட்களை வழங்கி ஏமாற்றி மத மாற்றம் நடைபெறுகிறது. மிரட்டி, கட்டாயப்படுத்தியும் மதமாற்றம் நடைபெறுகிறது. இவற்றை தடுக்க வேண்டும்" என்று கோரியிருந்தார். இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசு களும் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி குஜராத் அரசு நேற்று முன்தினம் பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க நிறைவேற்றப்பட்ட குஜராத் மதச் சுதந்திர சட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.மேலும், ‘‘மதமாற்றம் செய்வதை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற சட்ட விதிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த தடையை நீக்க வேண்டும்’’ என்று குஜராத் அரசு கோரியது.

இந்த சூழலில் பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாயா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர். ஷா, ரவிகுமார் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு சார்பில்ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, “கட்டாய மதமாற்றத்தை தடுக்க மாநில அரசுகளிடம் இருந்து தகவல்களை பெற்று வருகிறோம். இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் விரிவான மனுவை தாக்கல் செய் வோம். அதற்கு ஒரு வாரம் அவகாசம் தேவை’’ என்றார்.

தீவிரமான பிரச்சினை: அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். இதன்பிறகு நீதிபதிகள் கூறும்போது, “உதவி யின் நோக்கம் தூய்மையானதாக இருந்தால் அதனை வரவேற்கலாம். அதேநேரம் உதவியின் நோக்கம் மத மாற்றமாக இருந்தால் அது தவறு. இது மிக தீவிரமான பிரச்சினை. அரசியல் சாசனத்துக்கு எதிரானது’’ என்று தெரிவித்தனர். அடுத்த விசாரணை டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதே வழக்கு கடந்த நவம்பரில் விசாரணைக்கு வந்தபோது, “கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்சினை. இதை தடுத்து நிறுத்தாவிட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்’’ என்று நீதிபதிகள் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x