Published : 05 Dec 2022 07:08 PM
Last Updated : 05 Dec 2022 07:08 PM

Exit Poll results | குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி; இமாச்சலும் வசமாக வாய்ப்பு

தேர்தல் பிரச்சாரக் களத்தில் பிரதமர் மோடி | கோப்புப் படம்

அகமதாபாத்: குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய இருப்பதாகவும், இமாச்சல் பிரதேசத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவினாலும் கூட, பாஜகவே ஆட்சியைத் தக்கவைக்க இருப்பதாகவும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் வாக்களித்துவிட்டு வருபவர்களிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என்ற முக்கியமான கேள்விக்கு அவர்கள் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டங்கள் என தேர்தல்கள் நடக்கும்போது, தேர்தல்கள் முழுமையாக நடந்து முடிந்த பிறகே கருத்துக்கணிப்புகளை வெளியிட முடியும். அதற்கு முன்பாக வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இமாச்சல் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. 89 தொகுதிகளுக்கான முதற்கட்டத் தேர்தல் கடந்த 1ம் தேதி நடைபெற்றது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் இன்று (டிச.5) நடைபெற்றது. இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் முடிவடைவதால் மாலை 5.30 மணி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த தடை உத்தரவுக்கு கட்டுப்பட்டு, பல்வேறு நிறுவனங்களும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன. குஜராத்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 92 தொகுதிகளிலும், இமாச்சல் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 35 இடங்களிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம். இந்த பின்னணியில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து தற்போது பார்ப்போம்.

குஜராத் கருத்துக்கணிப்புகள்> நியூஸ் எக்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் குஜராத்தில் பாஜக 117 இடங்கள் முதல் 140 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 34 இடங்கள் முதல் 51 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், ஆம் ஆத்மி கட்சி 6 இடங்கள் முதல் 13 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளது.

ரிபப்ளிக் டிவி - பி. மார்க் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் குஜராத்தில் பாஜக 128 தொகுதிகள் முதல் 148 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கணித்துள்ளது. காங்கிரஸ் 30 முதல் 42 தொகுதிகள் வரையிலும், ஆம் ஆத்மி 2 முதல் 10 தொகுதிகள் வரையிலும் வெற்றி பெறும் என்றும் அது கணித்துள்ளது.

டிவி9 குஜராத்தி வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில், பாஜக 125 தொகுதிகள் முதல் 130 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 40 முதல் 50 இடங்கள் வரையிலும், ஆம் ஆத்மி கட்சி 3 முதல் 5 இடங்கள் வரையிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.

பி மார்க் வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 128 தொகுதிகள் முதல் 148 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் 30 முதல் 42 தொகுதிகள் வரை மட்டுமே வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு 2 இடங்கள் முதல் 10 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல் பிரதேச கருத்துக்கணிப்புகள்> நியூஸ் எக்ஸ்-ஜன் கி பாத் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் இமாச்சலில் பாஜக 32 இடங்கள் முதல் 40 இடங்கள் வரை வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 27 இடங்கள் முதல் 34 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளது.

ரிபப்ளிக் டிவி - பி. மார்க் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் இமாச்சலில் பாஜக 28 தொகுதிகள் முதல் 33 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. காங்கிரஸ் 28 முதல் 33 தொகுதிகள் வரையிலும், ஆம் ஆத்மி கட்சி 0 முதல் 1 தொகுதி வரையிலும் வெற்றி பெறும் என்றும் அது கணித்துள்ளது.

இந்தியா டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில், இமாச்சலில் பாஜக 35 தொகுதிகள் முதல் 40 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 26 முதல் 31 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், ஆம் ஆத்மி கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ்-இடிஜி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 34 முதல் 42 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் 24 முதல் 32 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் ஆம் ஆத்மி கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிஜி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 38 இடங்களிலும், காங்கிரஸ் 28 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வெற்றி பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்க் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 35-40 இடங்களிலும், காங்கிரஸ் 20-25 இடங்களிலும், ஆம் ஆத்மி 0-3 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 24-34 தொகுதிகளிலும், காங்கிரஸ் 30-40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி வசமாகும் டெல்லி மாநகராட்சி - டெல்லி மாநகராட்சிக்கு நேற்று (டிச.4) தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 250 வார்டுகள் உள்ளதால், 126 வார்டுகளில் வெற்றி பெறும் கட்சி மாநகராட்சியை கைப்பற்றும். இந்த பின்னணியில், இந்த தேர்தலில் யாருக்கு எவ்வளவு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்த கருத்துக்கணிப்புகளை தற்போது பார்ப்போம்.

ஆஜ் தக் - ஆக்ஸிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி 149 வார்டுகள் முதல் 171 வார்டுகள் வரை வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 69 முதல் 91 வார்டுகள் வரையிலும், காங்கிரஸ் கட்சி 3 முதல் 7 வார்டுகள் வரையிலும் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ் - ஜன் கி பாத் வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி 159-175 இடங்களிலும், பாஜக 70-92 இடங்களிலும், காங்கிரஸ் 4-7 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் - இடிஜி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி 146-156 இடங்களிலும், பாஜக 84-94 இடங்களிலும், காங்கிரஸ் 6-10 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x