Published : 05 Dec 2022 09:44 AM
Last Updated : 05 Dec 2022 09:44 AM

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்: அகமதாபாத் வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்

பிரதமர் மோடி

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப்பில் உள்ள வாக்குச்சாடியில் வாக்களித்தார். அவரது வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முன்னதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று குஜராத் இரண்டாம் கட்ட தேர்தலில் மக்கள் குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் திரளாக வந்து வாக்களிக்க வேண்டுகிறேன். நான் காலை 9 மணிக்கு நான் வாக்களிக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். அதன்படி இன்று காலை 9.25 மணியளவில் அவர் தனது வாக்கினை பதிவை செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து சிறிது தூரம் மக்களுக்கு கையசைத்தபடி நடந்து சென்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, "ஜனநாயகத் திருவிழாவை குஜராத், இமாச்சலப் பிரதேசம் மற்றும் டெல்லி மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் ஆணையம் தேர்தலை அமைதியாக நடத்தி வருகிறது. அதற்கும் வாழ்த்துகள்" என்றார்.

முன்னதாக பிரதமர் நேற்று தனது சொந்த ஊரில் தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி, குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜகதீஷ் தக்கோர், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா ஆகியோர் வாக்களிக்கின்றனர்.

களத்தில் 833 வேட்பாளர்கள்: காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இன்றைய தேர்தலில் 833 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 2.51 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். 26,409 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 36,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் நடைபெறும் 14 மாவட்டங்களில் 84 ஆயிரம் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் தேர்தல் நடைபெறுகிறது.

குஜராத் மாநில தலைமை தேர்தல் அதிகாரி பாரதி கூறுகையில், "மொத்தமுள்ள 26,409 வாக்குச்சாவடிகளில் 93 வாக்குச்சாவடிகள் மாடல் சாவடிகள், 93 சூழல் நட்பு வாக்குச்சாவடிகள், 93 சாவடிகள் மாற்றுத் திறனாளிகளால் இயக்கப்படுகிறது இவைதவிர 14 வாக்குச்சாவடிகள் இளைஞர்கள் வசம் உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் 13,319 வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு வெப்காஸ்ட் செய்யப்படுகிறது. மொத்தம் 2,51,58,730 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். இவர்களில் 1,29,26,501 பேர் பெண்கள். 1,22,31,335 பேர் ஆண்கள். 894 பேர் மூன்றாம் பாலினத்தவராவர்" என்றார்.

இன்று அகமதாபாத், காந்திநகர், மேஷானா, பதான், பானாஸ்கந்தா, சபர்கந்தா, ஆரவல்லி, மஹீஸ்நகர், பஞ்சமஹால், தாஹோத், ஆனந்த், கேதா, சோட்டா உதய்பூர் போன்ற மாவட்டங்கள் தேர்தலை சந்திக்கின்றன.

கேஜ்ரிவால் வேண்டுகோள்: குஜராத் தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சி விரிவான பிரச்சாரத்தை மேற்கொண்டது. பஞ்சாப்பை போல் குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், "புதிய நம்பிக்கைகளுக்கான தேர்தல் இது. பல பத்தாண்டுகளுக்குப் பின்னர் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு குஜராத் வளர்ச்சிக்காக வாக்களியுங்கள். இந்த முறை சற்று வித்தியாசமாக, அற்புதமானதை செய்யுங்கள்" என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x