Published : 10 Dec 2016 05:58 PM
Last Updated : 10 Dec 2016 05:58 PM
பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை தடம் புரண்டுவிட்டது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்தார். இந்த நடவடிக்கைக்கு மம்தா பானர்ஜி தொடக்கம் முதலே தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, "பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுகின்றனர். எனவே, இதைப்பற்றி மக்கள் சபையில் பேச வந்துள்ளேன்" என்றார்.
மோடியின் இந்தப் பேச்சை விமர்சிக்கும் வகையில் மம்தா தனது ட்விட்டர் பக்கத்தில், "பணமதிப்பு நீக்க நடவடிக்கை தடம் புரண்டுவிட்டது. இது பிரதமர் மோடிக்கு தெரியும். இந்த விவகாரத்தில் உரை நிகழ்த்துவதைத் தவிர அவரிடம் எந்தத் தீர்வும் இல்லை" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை மம்தா கூறும்போது, "பணமதிப்பு நீக்க நடவடிக்கை பொருளாதார பேரழிவுக்கு வழிவகுத்துள்ளது. எனவே, இதற்குக் காரணமான பிரதமர் மோடி அப்பதவியில் தொடர்ந்து நீடிக்க தார்மீக உரிமை இல்லை. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்" என கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT