Published : 02 Dec 2022 06:12 AM
Last Updated : 02 Dec 2022 06:12 AM

ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை | வளர்ந்து வரும் நாடுகளின் நலன்களைப் பாதுகாக்க உதவும்: அமிதாப் காந்த்

ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையொட்டி ஜி20 அமைப்பின் இந்தியக் குழுவின் தலைவரும் நிதி ஆயோக் முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான அமிதாப் காந்த் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளை உள்ளடக்கிய 20 நாடுகளின் குழுவான ஜி-20 அமைப்புக்கு இந்தியா நேற்று தலைமை ஏற்றுள்ளது. இந்திய தூதரக உறவுகள் வரலாற்றில் இது ஒரு சிறப்புமிக்க தருணம் ஆகும். நிலையான வளர்ச்சி இலக்குகள், பருவநிலை செயல்பாடு, உணவுப் பாதுகாப்பு, பொது சுகாதார அமைப்பு முறைகள், டிஜிட்டல் மாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கும் முன்னணி தளமாகவும், வலுவான அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகவும் ஜி-20 செயல்பட்டு வருகிறது.

1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் மக்கள் தொகை, உலகின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்காகும். உலக வர்த்தகத்தில் 75 சதவீதத்தை இந்த அமைப்பு கொண்டுள்ளது. உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடான ஜிடிபி-யைப் பொறுத்தவரை 80 சதவீதத்திற்கும் மேல் இந்த அமைப்பின் நாடுகளுக்கு சொந்தமானதாகும்.

ஜி-20 அமைப்பின் தலைவர் என்ற வகையில், வளர்ந்து வரும் நாடுகளின் நலன்களை பாதுகாக்கும் பிரதிநிதியாக செயல்படும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. நாடுகளின் கூட்டணியை உருவாக்குவதில் செழுமையான வரலாறும், உலகிலேயே இளைஞர்களை அதிகம் கொண்ட நாடாகவும் திகழும் இந்தியா, உலகின் சிறந்த நடைமுறைகளை கடைபிடித்து உடனடி தீர்வு காண வேண்டிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க உறுதி பூண்டுள்ளது. டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் இறுதி உச்சி மாநாட்டில் இதுவரை இல்லாத வகையில், 43 தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு பாலியில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததற்கு இணங்க, இந்தியாவின் தலைமையானது அனைவரையும் உள்ளடக்கிய, லட்சியமிக்க, தீர்க்கமான மற்றும் செயல்பாடு சார்ந்ததாக இருக்கும் என்பதை இது காட்டுகிறது.

ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்கும் தருணத்தில் பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பின் தாக்கம் பருவநிலை மாற்றத்தால் உருவாகியுள்ள பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலாக திகழ்கின்றன. இந்தியாவின் தலைமையில் பருவநிலை செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். பருவநிலை நிதி மற்றும் தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நாடுகளுக்கான எரிசக்தி மாற்றங்களை உறுதி செய்வதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

பருவநிலை மாற்றம் என்பது தொழில்துறை, சமூகம் மற்றும் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறையை நம் நாட்டின் வளம், பழமையான நிலையான பாரம்பரியங்களில் இருந்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கத்தை உலக நாடுகளுக்கு இந்தியா அறிமுகப்படுத்துகிறது. பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்து இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. 2047-ல்ஆண்டுக்கு 25 மில்லியன் டன் எனும் உற்பத்தி இலக்கை எட்டுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பத்தை வரும் ஆண்டுகளில் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று ஏற்கெனவே ஐக்கிய நாடுகளின் சபையின் நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடி பொது சுகாதாரம், உணவுச் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய காலக்கட்டத்தில் உலகம் உள்ளது. இந்த இலக்குகளை எட்டுவதை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கூட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு சிறந்த தூய்மையான, ஆரோக்கியமான, முன்னேற்றமான பூமியை வளர்க்க அவர்கள் உறுதியேற்க வேண்டும். சமகால சவால்களை சமாளிக்க உலகத்திற்கு சமகால அமைப்புகள் தேவையாகும்.

மேம்பட்ட, தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் மேலும் வளமான பூமியை மக்களுக்கு வழங்க வழிவகை செய்யும் ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் ஜி-20 அமைப்பு தனது உறுதிப்பாட்டை மேலும் துரிதப்படுத்த வேண்டும். பொறுப்புமிக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சர்வதேச அமைப்புகளின் உருவாக்கத்திற்கு இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.

சமூக பொருளாதார எல்லைகள்..

தொழில்நுட்பத்தை செயல் திறனுடன் தொடர்ந்து இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியா தனது அனுபவங்களையும், அறிவையும் உலகத்திற்கு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பாக ஜி-20 தலைமைப் பொறுப்பு அமையும். உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள முறையை (ஆதார்) வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் நிலையில், 2014 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கு இடையே நேரடிப் பயன் மாற்ற நடைமுறைகளை வெற்றிகரமாக இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த அனுபவங்களின் அடிப்படையிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தரவுகள் அடிப்படையிலும் இந்தியாதனது அனுபவங்களை உலகிற்கு எடுத்துச் செல்லும். 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவின் யுபிஐ திட்டத்தின் மூலம் சுமார் 700 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது நாளொன்றுக்கு 230 மில்லியன் பரிவர்த்தனைகளுக்கு சமமாகும். இத்தகைய வெற்றிகரமான செயல்பாடுகள் பிறநாடுகளுக்கு முன்மாதிரியாக அமைகிறது.

ஜி-20 நாடுகள் அமைப்புக்கு தலைமை வகிக்கும் இந்தியா மனித குலம் சார்ந்த தொழில்நுட்ப அணுகுமுறையை முன்மாதிரியாக கொண்டுள்ளது. கல்வி முதல் விவசாயம் வரை பல்வேறு துறைகளில் பொது டிஜிட்டல் கூட்டமைப்பு, அனைவருக்குமான நிதி வழங்கல், தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி ஆகியவற்றுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிகாரம் அளித்தலை முன்னுரிமையாக கொண்டு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜன்தன், ஆதார், மொபைல் போன் இணைப்பு மூலம் அனைவருக்கும் நிதி வழங்கலை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜன்தன் வங்கிக் கணக்குகளில் 56 சதவீதம் கணக்குகள் பெண்களுக்கு சொந்தமானதாக உள்ளது. முன்பு வங்கிக் கணக்குகள் வழியாக இணைக்கப்படாத 23 கோடி பெண்கள் இப்போது வங்கிக் கணக்குகளை வைத்துள்ளனர்.

2023-ம் ஆண்டு உலகளவில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொன்னான ஆண்டாக பரிணமித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் ஒருமித்த கருத்து அடிப்படையிலான கொள்கைகளை வகுப்பது எளிதான காரியம் அல்ல. உலகின் சக்தி வாய்ந்த நாடுகளிடையே வளர்ச்சி நிலைகளிலும், புவி அரசியல் உறவுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ரஷ்யா, உக்ரைன் இடையே மோதல் நடைபெற்று வரும் வேளையில் ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கிறது.

போர் இல்லா உலகம்

சர்வதேச பொருளாதாரம் தற்போது மந்த நிலையை சந்தித்து வரும் வேளையில், மோசமான உணவுப் பாதுகாப்பு மற்றும் சீர்குலைந்த விநியோக சங்கிலிகளுடன் நாடுகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஒருங்கிணைந்த, நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நாடாக உருவெடுக்கும் வாய்ப்பு இந்தியா வசம் உள்ளது. பாலியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின் வரைவு அறிக்கையில் ஒருமித்த கருத்தை எட்டுவதில் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா மிக முக்கியமான பங்களிப்பை வழங்கியது. அமைதியின் தூதராக இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் வகையில், “தற்போதைய சகாப்தம் போர் நிறைந்ததாக இருக்கக் கூடாது” என்ற பிரதமரின் உரை கூட்டுப் பிரகடனத்தில் நேரடியாக பிரதிபலித்தது.

பொருளாதார, சமூக வளர்ச்சியில் உருவெடுத்து வரும் இளமையான, எழுச்சிமிக்க நாடுகளுக்கு பழைய அதிகார மையங்கள் வழிவிடும் சூழலில் இந்தியாவின் லட்சியமிக்க செயல்திறன் கொண்ட தலைமைத்துவம் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் தேவைகள் மற்றும் நலன்களை நோக்கி புதிய அணிகளை திரட்ட வகை செய்யும். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற பாதையை நோக்கி, சர்வதேச சவால்களை மாற்றத்துக்கான வாய்ப்பாக மாற்றும் செயல்களில் தமது தலைமை பொறுப்பின் போதும் இந்தியா தொடர்ந்து ஈடுபடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x