Published : 01 Dec 2016 06:34 PM
Last Updated : 01 Dec 2016 06:34 PM
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது, அதன் தொடர்ச்சியான பணத்தட்டுப்பாடு பிரச்சினையில் இன்று (டிச.1) பகிரப்பட்ட 10 முக்கிய கருத்துகள்:
மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர்:
"முறைகேடு தொடர்புடைய மிகப்பெரிய விவகாரம் இது. அரசு ஊழியர்களும் ஏழைகளும் சம்பளம் பெற முடியவில்லை. மக்களை தவணை முறையில் வதைக்கிறீர்கள், அன்றாடம் ஒரு புதிய சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. நாட்டு மக்கள் இன்னல் அடைந்துள்ளனர். ஆனால் அரசோ நிம்மதியாக உளளது."
அனந்த் குமார், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்:
"கறுப்புப் பண விவகாரத்தில் நாடே பிரதமர் மோடியின் பக்கம் நிற்கிறது."
குலாம் நபி ஆசாத், எதிர்க்கட்சித் தலைவர்:
"எதிர்க்கட்சியினரை, கறுப்புப் பணத்துக்கு ஆதரவானவர்கள் என நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியதற்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கோர வேண்டும்."
பிரகாஷ் ஜவடேகர், மத்திய அமைச்சர்:
"மாநிலங்களவைக்கு பிரதமர் மோடி வந்தபோதும் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பான விவாதத்தை நடத்த விடாமல் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடுகின்றனர். இதன்மூலம் அவர்களது போலி வேஷம் களைந்துவிட்டது."
அருண் ஜேட்லி, மத்திய நிதியமைச்சர்:
"பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் நடைமுறைகள் அனைத்தும் முழுமை பெறும்போது, இந்திய பொருளாதார வளர்ச்சி முழு வீச்சில் சீரடைவது உறுதி."
அகிலேஷ் யாதவ், உத்தரப் பிரதேச முதல்வர்:
"பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் சுணக்கம் அடைந்துள்ளது. நாடு இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை ஆகலாம்."
மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்:
"புதிய ரூ.500, ரூ.100 நோட்டுகள் விநியோகத்தில் மாநிலங்களிடையே கடும் பாரபட்சம் காட்டப்படுகிறது. எனவே, உடனடியாக ஆர்பிஐ விவரங்களை வெளியிட வேண்டும். அனைத்தும் பாரபட்சம், எந்த வித திட்டமும் இல்லை.
சம்பளம் வாங்கும் பிரிவினர் தங்கள் பணத்தையே வங்கிகளிலிருந்து எடுக்க முடியவில்லை. ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவுகளில் இருப்பவர்களுக்கே இந்த நிலையென்றால், மற்ற பிரிவினருக்கு நேரும் கதியை கற்பனை செய்து கொள்ளலாம்."
சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வர்:
"பண மதிப்பு நீக்க நடவடிக்கையானது ஒரு பிரச்சினையே அல்ல. மாறாக, நம் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாகவே இதைக் கருதவேண்டும். இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சீரமைப்பு நடவடிக்கை. இந்திய வரலாற்றில் புதிய மாற்றம். இதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்."
அமர்த்தியா சென், பொருளாதார அறிஞர்:
"நம்பிக்கையின் அடிப்படையில், வாக்குறுதிகளின் அடிப்படையில் இயங்கி வரும் பொருளாதாரத்தின் வேரையே அடித்து நொறுக்கும் எதேச்சதிகார முடிவே ரூ.500, ரூ.1000 நோட்டுகள் நீக்க நடவடிக்கை."
முகேஷ் அம்பானி, தொழிலதிபர்:
"பண மதிப்பு நீக்கம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க துணிச்சல் முடிவால் ஏற்படும் மாற்றங்கள் மூலம் சாமானிய மக்கள் அனைவரும் மிகப் பெரிய அளவில் பலன்களைப் பெறுவர் என்று நம்புகிறேன்."
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT