Published : 24 Nov 2022 05:33 AM
Last Updated : 24 Nov 2022 05:33 AM

இந்துக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 6 வாரம் அவகாசம்

புதுடெல்லி: இந்துக்கள் குறைவாக உள்ள மாநிலங்களில், அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் மேலும் 6 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் 1992, சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என்று கூறுகிறது. இதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், அரசியல் சாசனத்தின் 30-வது பிரிவை சுட்டிக்காட்டி, மாநில அளவிலேயே மதம் மற்றும் மொழி அடிப்படையில் சிறுபான்மையினரை அடையாளம் காணலாம் என்று டிஎம்ஏ பாய் வழக்கில், உச்ச நீதிமன்றம் 2002-ம் ஆண்டில் பிறப்பித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த மனுக்களில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தின் 30-வது பிரிவானது, கல்வி நிறுவனங்களை நிறுவி, அவற்றை நிர்வகிக்கும் உரிமையை சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீர், லடாக், லட்சத் தீவுகள், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில், மற்ற மதத்தினரைவிட இந்துக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

எனவே, அந்த மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க, மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்பதுதான் மனுதாரர்களின் கோரிக்கையாகும்.

இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பதில் மனு தாக்கல் செய்வதில் காலதாமதம் செய்ததால் மத்திய அரசைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், ரூ.7,500 அபராதம் விதித்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், மாநில அரசுகளே சிறுபான்மை அந்தஸ்து வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இதற்கு எதிர்ப்பு கிளம்பியால், மத்திய அரசுக்கே இந்த விவகாரத்தில் அதிகாரம் இருப்பதாக பின்னர் தெரிவித்தது. அதேநேரம், இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த அவகாசம் வேண்டும் எனவும் மத்திய அரசு கோரியது. இதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “8 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்க, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது. இதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசா ரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், “இதுவரை 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிட மிருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன. விரைவாக கருத்துகளை அனுப்பி வைக்குமாறு மற்ற மாநிலங்களுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பரிசீலித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மேலும் 6 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் 4 வாரங்களில் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு, இதுவரை பதில் அளிக்காத மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x